நடிகர் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் பாட்ஷா படத்துக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் ஜெயிலர். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். ஜெய்பீம் படத்துக்கு பிறகு இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கும் இந்த படம் மிகவும் கவனம் பெற்றதாக இருக்கிறது. இந்த படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.
ஜெய்பீம் படத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் லாக்கப் மரணம், விளிம்பு நிலை மனிதர்களுக்கு கிடைக்கும் கொடூர தண்டனை குறித்து வலுவாக பேசியிருந்த இயக்குனர் தசெ ஞானவேல், வேட்டையன் படத்திலும் மிக முக்கியமான விஷயத்தை தான் கொண்டு வந்திருப்பார் என வேட்டையன் படப்பிடிப்பு துவங்கியது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இதில் ரஜினிக்கு மகனாக பகத் பாசிலும், அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடித்துள்ளதாக தெரிகிறது.
ஜெயிலர் மெகா ஹிட்டுக்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு, மீண்டும் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ளார்.
இதனால் சமூக குற்றவாளிகளை தண்டித்து அழிக்கும் செயலை செய்வதாக பலரும் சுட்டுத்தள்ளி கொல்லும் செயலை பெருமையாகவும் கருதுகிறார். இந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தை சந்திக்க நேரிடுகிறது. சில உண்மைகளை அறிந்து மனம் மாறுகிறார். அவர் சுட்டுக்கொன்ற அனைவரது வீடுகளுக்கும் சென்று நடந்த உண்மைகளை அறியும் ரஜினிகாந்த் இறுதியில் என்கவுண்டர் நடவடிக்கைக்கு எதிராக போராடுவதே வேட்டையன் படத்தின் கதை என தகவல் தெரிய வந்துள்ளது.





