தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். 73 வயதிலும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து வேட்டையன் படத்தில் நடித்த ரஜினி, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவரும் நிலையில் வருகிற பிப்ரவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது. அதன்பிறகு கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அதே போல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக காலடி பதித்த ரஜினிகாந்த், வருகிற 2025ம் ஆண்டில் தனது சினிமா பயணத்தில் 50வது பொன்விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார். அதனால் கூலி, ஜெயிலர் 2 படங்களை அடுத்த ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தி தளபதி படமும் வருகிற ரஜினி பிறந்த நாளில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை துவக்கியவர். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த ரஜினி, அவரது அண்ணன் சத்யநாராயணாவால் வளர்க்கப்பட்டவர். ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் என்பதும், இயக்குனர் கே பாலசந்தர் அந்த பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்தை, உன்னிடம் நிறைய நடிப்பு திறமை உள்ளது. சென்னைக்கு சென்று தமிழ் படங்களில் நடித்தால் பெரிய ஸ்டாராகி விடலாம் என நம்பிக்கையூட்டி அவரை அனுப்பி வைத்தவர், ரஜினியின் நெருங்கிய நண்பர் ராவ் பகதூர். இப்போதும் அவருடன் நெருங்கிய நட்பில் ரஜினி இருந்து வருகிறார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கை சம்பவங்களை சுயசரிதையாக எழுதி வெளியிட ரஜினிகாந்த் ஆசைப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அதை தள்ளி வைத்துவிட்டார். ஆனால் இப்போது தனது வாழ்க்கை கதையை சுயசரிதையாக எழுதி அவர் முடிவெடுத்து இருக்கிறார். அதனால் அவரது சுயசரிதை நூல், அடுத்த ஆண்டில் அவரது பொன்விழா ஆண்டு சிறப்பு மலராக வெளியீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





