நகைச்சுவை நாயகனிலிருந்து கதாநாயகன் என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சந்தானம். இவர் காமெடி ஹீரோவாக இருந்த காலத்தில் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்து கலக்கி இருக்கிறார். சந்தானம் இருக்கிறார் என்பதற்காகவே ஓடிய திரைப்படங்களும் இங்கு உண்டு. அந்த அளவுக்கு அவரது கவுன்ட்டர் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் எடுபடும்.
இப்படியான சூழலில்தான் ஒரு காமெடி ஹீரோ என்னும் கதாபாத்திரத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு முழு நீள ஹீரோவாக உருமாறினார் சந்தானம். இந்தப் பாதையில் கிட்டத்தட்ட அவர் நீண்ட காலமாக பயணித்து வரும் சூழலில் இது அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.
குறிப்பாக தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு படத்தின் இரண்டாம் பாகம், பாரிஸ் ஜெயராஜ், ஏ ஒன், டி டி ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தன. வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் சந்தானத்தின் குட் லிஸ்டில் சேர்ந்தது. இப்படியான சூழலில்தான் தற்போது அவர் டிடி நெக்ஸ்ட் லெவல் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் பலருக்கும் மிகவும் பிடித்துப் போனது. வழக்கம்போல காமெடி காட்சிகள் தூக்கலாக இருப்பது அதன் ட்ரைலரை பார்க்கும்போதே தெரிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கடற்கரையில் காக்க காக்க பாடலுக்கு, அதன் இயக்குனர் கௌதம் மேனனே சூர்யாவைப் போல் ஓடிய காட்சிகள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. அது ரசிகர்கள் மத்தியில் நன்றாகவும் ரீச் ஆனது.
இப்படியான சூழலில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற அதில் சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா மற்றும் சிறப்பு விருந்தினராக சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய சந்தானம், சிம்பு சார் இல்லையென்றால் நான் ஒன்றுமே கிடையாது. மன்மதன் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது அவர்தான். அதே அன்புடன் தான் நான் இப்போது எஸ்டிஆரின் 49 வது திரைப்படத்தில் இணைந்து இருக்கிறேன். இயக்குனர் எனக்கு சமமான வாய்ப்பை அளித்திருப்பதாக சிம்பு என்னிடம் தெரிவித்தார். எஸ் டி ஆர் ஐ போன்ற மனிதரை எனக்கு கொடுத்ததற்கு நான் கடவுளிடம் நன்றி கூறுகிறேன்.
சேட்டை படத்தின் போது எனக்குத் தெரியாமலேயே ஆர்யா, காமெடி சூப்பர் ஸ்டார் என்று வைத்து விட்டான். லிங்கா படத்தின் சூட்டிங் போது இது குறித்து என்னிடம் ரஜினிகாந்த் கேட்டார். நீங்கள் தான் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று ரஜினிகாந்த் என்னிடம் கேட்டதும், ஆர்யா தான் அப்படி வைத்தான் என்று கூறினேன். அதற்கு அவர் நீங்கள் சொல்லாமலா அவன் அதை செய்திருப்பான் என்று கேட்டார் என சந்தானம் பேசினார். அவரது இந்த பேச்சு அரங்கை கலகலப்பாகியது.





