நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அதன் பிறகு 18 மாதங்களாக இதுவரை அவரது படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு, 10 மாதங்களாக நடந்து வருகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பை மிக தாமதமாக அஜர்பைஜானில் துவங்கிய நிலையில் தொடர்ந்து பனிமழை, புயல் மழை, மணல் புயல், கடும் குளிர் என பல காரணங்களால் படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டது. ஒரு நாளில் சில மணி நேரங்களே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கலை இயக்குனர் மிலன் மறைவு, தொழிலாளர் பிரச்னை, இயற்கை சீற்றங்களால் படப்பிடிப்பு தொய்வடைந்தது.
எனினும் கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்கள், படப்பிடிப்பே நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, வேட்டையன், விடாமுயற்சி உள்ளிட்ட 4 படங்களை லைகா புரடக்சன்ஸ் ஒரே நேரத்தில் தயாரித்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டு, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத சிக்கல் ஏற்பட்டது. பிறகு, நிலைமை சீரான பிறகு, கடந்த ஜூனில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
ஜூன், ஜூலை மாதங்களில் அஜர்பைஜானில் அஜீத்குமார் பங்கேற்ற படப்பிடிப்பு வேகமாக நடந்தது. அப்போது தொடர்ந்து அஜீத்குமாரின் புகைப்படங்கள் அடுத்தடுத்து அப்டேட் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள அர்ஜூன் புகைப்படமும் அப்டேட் செய்யப்பட்டு, டிரண்டிங் ஆனது. சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு குழு ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியது.
இப்போது கடந்த 29ம் தேதி முதல் ஐதராபாத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத்குமார், படத்தின் நாயகி திரிஷா பங்கேற்ற பாடல் காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இங்குதான் எடுக்கப்பட உள்ளது. இத்துடன் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைகிறது.
இந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை அஜர்பைஜானில் முதலில் எடுப்பதாக இருந்தது. பிறகு அஜீத்குமார் ஆரம்பத்திலேயே கூறியபடி சென்னையில் இல்லாமல், ஐதராபாத்தில் எடுக்கப்படுகிறது. இதன்பிறகு பேட்ச் ஒர்க் ஆக விடுபட்ட காட்சிகளும் எடுக்கப்பட உள்ளதால், இன்னும் அது பாக்கி இருக்கா, அதுக்கு இன்னும் ஒரு மாதம் தாமதம் செய்யாமல், சீக்கிரமாக படத்தை முடிங்க என்று, அஜீத் ரசிகர்கள் படக்குழுவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





