நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக இருந்து பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தென்மேற்கு பருவக்காற்று படம்தான் அவரை படத்தில் நாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது.
தொடர்ந்து கதாநாயகனாக நடித்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்துக்கு பிறகு திடீரென வில்லன் கேரக்டர்களிலும் நடிக்க துவங்கினார். ரஜினிகாந்துடன் பேட்ட, கமல்ஹாசனுடன் விக்ரம், விஜயுடன் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர், ஹாலிவுட்டில் ஷாருக்கானுக்கும் வில்லனாக ஜவான் படத்தில் நடித்தார்.
அதுமட்டுமின்றி பல படங்களில் கேமியோ ரோல்களிலும் விஜய் சேதுபதி நடித்துக் கொடுத்தார். நல்ல கதையம்சம் உள்ள ஆரஞ்சு மிட்டாய், கடைசி விவசாயி, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களை விஜய் சேதுபதி தயாரிக்கவும் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதிக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப்படங்கள் எதுவுமே இல்லை. அதனால் அவரது படங்கள் வெகுவாக குறைந்து போய்விட்டன. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், பொன் இயக்கிய டிஎஸ்பி. இந்த படம் படுதோல்வி அடைந்தது.
அதன்பிறகு இப்போது விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மகாராஜா. இது அவரது 50வது படம். வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோசனை உலகம் முழுவதும் 50 நகரங்களில் பிரிமியர் ஷோக்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் துபாய் புறப்பட்டுச் சென்ற மகாராஜா படக்குழு, அங்குள்ள புர்ஜ் கலிஃபா உயர்ந்த கட்டிடத்தில், மகாராஜா படத்தின் டீசரை காட்சிப்படுத்தி உள்ளனர். 3 நிமிடங்களுக்கு ரூ. 75 லட்சம் கட்டணம். தனது 50வது படம் என்று இதை வற்புறுத்தி காட்டச் சொன்னவர், படத்தின் நாயகன் விஜய் சேதுபதி தான். ஆனால் இது தயாரிப்பாளர் கணக்கு என்றும் கூறிவிட்டாராம். சினிமாவில் நடிக்க வரும் முன்பு இதே துபாயில், அக்கவுண்டன்ட் ஆக சில ஆயிரங்கள் சம்பளத்தில் விஜய் சேதுபதி பணிசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





