நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு இந்த படத்தில் நடித்திருந்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட தக்லைஃப் படம் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்தது. அதனால் மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் நடிக்க இருந்த சிம்புவும் சுதாரித்துக்கொண்டு விலகி விட்டார்.
இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா இணைந்து உருவாக்க இருந்த வாடிவாசல் படமும் டிராப் ஆகி விட்டது. சூர்யா போட்ட சில கண்டிசன்களால் அப்செட் ஆன இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதனால் வாடிவாசல் படம் நின்று போய்விட்டது.
இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க வெற்றிமாறன் முன்வந்தார். எஸ்டிஆர் 49 என தற்காலிக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தின் பிரமோ ஷூட் 4 நாட்கள் நடந்தது. ஆனால் அதன்பிறகு படப்பிடிப்பு துவங்கவில்லை. தயாரிப்பாளர் தாணு இந்த படத்தை தயாரிக்க இருந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய் என்றதால் தாணு திடீரென பின்வாங்கி விட்டார்.
தமிழ் சினிமாவில் கூலி குபேரா கங்குவா இந்தியன் 2 தக்லைஃப் விடாமுயற்சி என பெரியதாக எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர நடிகர்களின் படங்கள் பிளாப் ஆகி வருகின்றன. வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய விடுதலை 2 படமும் வசூல் ரீதியாக தோல்வி படம்தான். சிம்பு கடைசியாக நடித்த தக்லைஃப் படமும் தோல்வியை சந்தித்தது.
அதனால் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எஸ்டிஆர் 49 படத்தை தயாரித்தால் ஒருவேளை படம் பிளாப் ஆகிவிட்டால் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேருமே என்று தயாரிப்பாளர் தாணு இந்த படத்தை தயாரிக்காமல் பின்வாங்கி விட்டார். ஒரு தயாரிப்பாளராக அவர் அந்த முடிவை எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை வெற்றிமாறனும் நடிகர் சிம்புவும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனே தயாரிக்கும் ஒரு முடிவில் இருக்கிறார். ஆனால் அதற்கு சில மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுவதால், நடிகர் சிம்பு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார். இந்த படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. மிக விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





