தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பவர் கல்பனா. ஆண்பாவம் புன்னகை மன்னன் போன்ற சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார். பல இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். அவருக்கு கணவர் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் அவர் மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்த நிலையில் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
அதிக எண்ணிக்கையில் அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் இந்த பாதிப்பு பாடகி கல்பனாவுக்கு ஏற்பட்ட நிலையில், டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர். சுய நினைவு திரும்பிய பாடகி கல்பனாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
போலீசாரிடம் பாடகி கல்பனா கூறியதாவது, கடந்த 4ம் தேதி கேரளா எர்ணாகுளத்தில் இருந்து ஐதராபாத்துக்கு வந்தேன். தூக்கமின்மை காரணமாக முதலில் 8 தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து மேலும் கூடுதலாக 10 தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். டாக்டர் பரிந்துரைத்த அளவைவிட அதிக தூக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்ததால் வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கல்பனா கூறியிருந்தார்.
மேலும் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, என்னுடைய வாழ்க்கையில் எனக்கும் என் கணவருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. எனக்கு ரொம்ப நல்ல கணவரும் அழகான மகளும் உள்ளனர். இவர்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நான் ரொம்பவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
நான் இந்த வயதில் பிஎச்டி எல்எல்பி உள்ளிட்ட நிறைய விஷயங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். எனது இசைத்தொழிலிலும் நான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு மன அழுத்தம் அதிகரித்தது. சரியான தூக்கமும் இல்லை. எனக்கு இன்சோமியா பிரச்னை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான சிகிச்சையும் எடுத்து வருகிறேன் என்று பாடகி கல்பனா கூறியிருக்கிறார்.





