தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. இதற்கு முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் கல்லா கட்டிய இந்த நிறுவனம் தற்போது, அமரன் திரைப்படத்திற்காகவும் லாபத்தை பெற்றிருக்கிறது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இதில் முகுந்தின் மனைவியாக இந்து ரபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார் சாய் பல்லவி.
அவர் அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறுவதற்கு பதிலாக வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. ஒவ்வொரு காட்சியிலும் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நடித்து பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் சாய் பல்லவி என்று கூறலாம். இதே போல் சிவகார்த்திகேயனும் தனது உழைப்பை 100% கொடுத்திருக்கிறார். ராணுவ வீரர் கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஏற்றது போல உடலமைப்பை மாற்றி கெத்து காண்பித்திருக்கிறார். சொல்லப்போனால், இந்த திரைப்படத்தின் மூலம் அவர் ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக உருவெடுத்து விட்டார் என்றே கூறலாம்.
இந்த படம் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்தும் திரையரங்கு விநியோகஸ்தர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமரன் திரைப்படம் உருவாகும்போது, தலையில் தொப்பியுடன் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்து இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகரிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், இது யாரோ பார்த்த வேலை என்றும் அவரைத்தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் நகைச்சுவையாக பேசினார். படத்திற்காக கட்டுமஸ்தான உடல் கிடைப்பதற்கு உடற்பயிற்சி செய்தேன் என்றும் ஆனால் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.





