சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அதற்கு முன்னதாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு, வெளிச்சத்தை கொடுத்த படம் தான் சேது. இயக்குனர் பாலாவுக்கும் சரி நடிகர் விக்ரமுக்கும் சரி அவர்களது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இது அமைந்தது.
பிறகு பாலா தொட்ட அத்தனை திரைப்படங்களும் வெற்றி தான். நந்தா, பிதாமகன், நான் கடவுள் என தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்து நம்மை அதிர வைத்தார் பாலா. இதில் நந்தா திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சொல்லப்போனால் இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் சரியான நேரத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர்தான் பாலா என கூறலாம். கடந்த காலங்களில் அவர் இயக்கிய திரைப்படங்கள் தோல்வியை சந்திக்க, கடைசியாக சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்தார்.
ஆனால் இந்த திரைப்படமும் பாதியில் நின்று போனது. பிறகு அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க தயாரானார். தற்போது இந்த திரைப்படம் வளர்ந்து பொங்கல் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25 ஆண்டுகள் திரையுலக பயணத்தின் நிறைவு விழா இரண்டும் ஒரு சேர கொண்டாடப்பட்டது.
இதில் நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், அருண் விஜய் அண்ணாவின் விடாத அந்த அர்ப்பணிப்பும், கடின முயற்சியும் தான் என்னை பொருத்தவரைக்கும் உண்மையான வெற்றி என்று கூறுவேன். வணங்கான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.
எதிர்மறையான மற்றும் சோகமான காட்சிகளைக் கொண்ட கிளைமாக்ஸ் இருக்கும் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானால் ஓடாது என்ற ஒரு கட்டுக்கதை இருந்தது. ஆனால் இதனை அமரன் முறியடித்து இருக்கிறது என்று கூறுவேன். இதனை அப்போதே இல்லாமல் காட்டியவர் இயக்குனர் பாலா. அவரது பிதாமகன் திரைப்படம் சோகமான கிளைமாக்ஸ் காட்சியை தான் கொண்டிருக்கும். பொங்கல் பண்டிகைக்கு, விடாமுயற்சி மற்றும் வணங்கான் இரண்டு திரைப்படங்களும் வருகின்றன. வி என்றாலே விக்டரி தான். இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெறுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பேசி இருக்கிறார்.





