தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் ஒரு வெற்றிப் பட இயக்குனராக வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் டி ராஜேந்தா். அவர் இயக்கி நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களால் தியேட்டர்களில் கொண்டாடப்பட்டன. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து பார்த்த படங்கள் டி ராஜேந்தரின் படங்களாக அப்போது இருந்தன.
ஒரு தலை ராகம் ரயில் பயணங்களில் உறவை காத்த கிளி சம்சார சங்கீதம் தங்கைக்கோர் கீதம் என் தங்கை கல்யாணி உயிருள்ள வரை உஷா மைதிலி என்னை காதலி ஒரு தாயின் சபதம் என பல படங்களை தந்தவர் இயக்குனர் டி ராஜேந்தர். இதில் பல படங்களில் அவரே நாயகனாகவும் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு இயக்கம் மட்டுமின்றி இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் திரைக்கதை ஆசிரியர் வசனகர்த்தா தயாரிப்பாளர் என பலவிதமான திறமையை வெளிப்படுத்தியவர் டி ராஜேந்தர். வரும் 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு முன்னதாக 13ம் தேதி இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான உயிருள்ள வரை உஷா படம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதுபற்றி இயக்குனர் டி ராஜேந்தர் கூறியதாவது, 1980 காலகட்டம் என்பது காதலை சொல்வதற்கே கஷ்டப்பட்ட ஒரு காலமாக இருந்தது. ஒரு பெண்ணுக்கு அருகில் போய் பேசுவதையே சரித்திரமாக நினைப்பார்கள். அந்த பொண்ணு கிட்ட எப்படி காதலை சொல்லலாம், காதல் கவிதை எப்படி சொல்லலாம் என்று நினைத்த ஒரு காலகட்டமாக அது இருந்தது.
மௌனமான காதல் என்பது ஆணுக்கு மட்டுமல்ல, பெண்ணுக்கும் அப்படி இருந்ததால் தான் ஒரு தலை ராகம் படத்துக்கு பெண்களும் படை எடுத்தார்கள். அந்த படம் எடுத்தது டி ராஜேந்தர். தியேட்டருக்கு படை எடுத்தது பெண்களாக இருந்தார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது காதலை சொல்ல முடியாத உணர்வை அந்த படம் அப்படியே பிரதிபலித்தது.
நான் அதற்கு பிறகு நிறைய படங்கள் எடுத்தாலும் உயிருள்ள வரை உஷா படம் தான் என்னை வேறொரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. எனவே அந்த லவ் ஸ்டோரியை இன்று இருக்கிற 2கே கிட்ஸ் இளம் தலைமுறைக்கு போய் சேர வேண்டும். இப்போதும் எப்படி அவர்களின் மனங்களை பிடிக்க வேண்டும் என்று அப்போதே மக்களின் மனநிலையை அறிந்து படம் எடுத்தவன் நான். எனவே உயிருள்ளவரை உஷா படத்தை இப்போது ரி ரிலீஸ் செய்கிறேன் என்று இயக்குனர் டி ராஜேந்தர் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





