தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் அதாவது கருப்பு வெள்ளை காலத்தில் நடிகர்கள், நடிகைகள் வாங்கிய சம்பளம் சில நூறுகளாக கூட இருந்திருக்கின்றன. 200 ரூபாய், 500 ரூபாய் சம்பளம் என வாங்கிக்கொண்டு ஒரு படம் முழுக்க நடித்த நடிகைகளும் இருக்கவே செய்கின்றனர். எம்ஜிஆர், சிவாஜி சம்பளமே துவக்கத்தில் சில ஆயிரங்களாக இருந்து, பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த பிறகுதான் லட்சங்களுக்கு மாறியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வளர்ந்த பின் பெரிய ஸ்டார் நடிகையாக மாறியவர். அவர் ரஜினி, கமலுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதேவி, மூன்று முடிச்சு படத்தில் நடித்த போது கமல் சம்பளம் 30 ஆயிரம், என் சம்பளம் 5 ஆயிரம், நடிகர் ரஜினி சம்பளம் ரூ. 2ஆயிரம் என கூறியிருந்தார்.
துவக்கத்தில் அப்படித்தான் அவர்களது சம்பளம் இருந்திருக்கிறது. பிறகு பெரிய நடிகராக மாறிய பிறகுதான் ரஜினி, கமல் சம்பளம் லட்சங்களுக்கு உயர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நீங்கள் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என ரஜினிக்கு, தைரியம் கொடுத்ததே கமல்தான். அதன்பிறகு ரஜினி சம்பளம் கோடி ரூபாயாக மாறியது.
ஆனால் இப்போதெல்லாம் சில படங்களில் நடித்து விட்டாலே, கோடிகளில் நடிகர், நடிகையர் சம்பளம் வாங்க ஆரம்பித்து விடுகின்றனர். யோகிபாபு, சூரி, சந்தானம் போன்றவர்களே, காமெடியனாக இருந்து ஹீரோ ஆனவர்கள்தான். அவர்களது சம்பளம் இப்போது பல கோடி ரூபாய்களாக இருக்கிறது.
இப்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய், இப்போது நடித்து வரும் கோட் படத்துக்கு ரூ. 200 கோடி, அடுத்து நடிக்கும் தனது 69வது படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் என்ற நிலையில், முதலிடத்தில் இருக்கிறார்.
அடுத்து அஜீத்குமார் (ரூ. 163 கோடி) இரண்டாமிடம், ரஜினிகாந்த் (ரூ. 140 கோடி) மூன்றாமிடம், கமல்ஹாசன் ( ரூ. 140 கோடி) நான்காமிடம், சூர்யா ( ரூ. 60 கோடி) (ஐந்தாமிடம்) பிடித்துள்ளனர். அடுத்து சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடி, தனுஷ் ரூ. 50 கோடி, கார்த்தி ரூ. 28 கோடி, சிம்பு ரூ. 25 கோடி, விஷால் ரூ. 25 கோடி பெறுகின்றனர். இந்த லிஸ்ட்டில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இல்லையே என அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.





