கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஞானவேல். அசோக் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படம், பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனால் அடுத்த படத்தில் வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியில் இருந்த, சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, முழுக்க முழுக்க கதையை நம்பி ஞானவேல் எடுத்த இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தில் நடித்த சூர்யா, ராசா கண்ணு கதாபாத்திரத்தில் வாழ்ந்த மணிகண்டன், செங்கேணியாக வாழ்ந்த லிஜோமோல் தாமஸ் உள்ளிட்டோரின் நடிப்பு படத்திற்கு வலு சேர்த்தது.
நேரடியாக ஜெய் பீம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாதது மட்டுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய உறுத்தலாக இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு ஞானவேலின் அடுத்த படம் குறித்த பேச்சு எழ ஆரம்பித்தது. இப்படியான சூழலில் தான் ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார்.
அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நாகர்கோயிலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. என்கவுண்டர் தேவையா இல்லையா என்பது தான் படத்தின் மெயின் விவாதம் என்றும் கூறப்படுகிறது.
படத்தின் டிரைலரில், ரஜினிகாந்த் என்கவுண்டரை ஆதரிப்பது போலவும், அமிதாப்பச்சன் அதற்கு எதிராக இருப்பது போலவும் வசனங்கள் இடம் பெற்று இருந்தன. இருப்பினும் பள்ளிக் கல்வித் துறை குறித்த விஷயங்களும் படத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. நாளை படம் வெளியாகும் சூழலில், அதன் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
சினிமா வட்டாரத்தில் சிலர் படத்தை பார்த்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் படத்தின் இரண்டாம் பாதி மிக நன்றாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் தான் ஆதிக்கம் செலுத்தி இருப்பதாகவும், பகத் பாசில் மற்றும் ராணா இருவரும் கலக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேட்டையனில் ஒரு நல்ல ட்விஸ்ட் இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது.





