நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி திரை உலகிற்கு வந்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. அந்த நிகழ்ச்சியில் சில குறும்படங்களை எடுத்து, நடுவர்களை கவர்ந்த அவர் அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் சூது கவ்வும் திரைப்படத்தை இயக்கினார்.
விஜய் சேதுபதி அப்போதுதான் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த நேரம் அது. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என இரண்டு திரைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து இருந்தனர். அதற்கு கொஞ்சம் கூட சலிப்பைத் தட்டாமல் விறுவிறுப்பாக படத்தை எடுத்திருந்தார் நலன் குமாரசாமி.
விஜய் சேதுபதி, சஞ்சனா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், அருள்தாஸ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான களத்தை கையில் எடுத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஒருபுறம் ஆள் கடத்தலில் ஈடுபடும் இளைஞர்கள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க துடிக்கும் அமைச்சரின் மகன், விசாரணை கைதிகளை சுட்டுக் கொல்லும் காவலர் என ஆங்காங்கே ஒவ்வொரு கதைகளையும் சொல்லி அதை ஒரே நேர்கோட்டில் நகைச்சுவையாக இணைத்து சபாஷ் போட வைத்திருந்தார் நலன் குமாரசாமி. இதன்பிறகு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் அவரை இணைந்தார்.
இந்த முறை கொரியன் திரைப்படத்தை ரீமேக் செய்து காதலும் கடந்து போகும் என்றும் பெயரில் அவர் திரைப்படத்தை எடுக்க, விமர்சன ரீதியாக அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபஸ்டின் இருவரும் போட்டி போட்டு நடிக்க அந்தப் படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கார்த்தியுடன் இணைந்து நலன் குமாரசாமி படம் எடுத்து வருகிறார்.
இதில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகராக வருகிறாராம். ராஜ்கிரன் சத்யராஜ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் நலன் குமாரசாமி இணைய உள்ளாராம். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.





