தமிழ் சினிமாவில் தனது நடிப்பினால் தனிப்பாதையை வகுத்து உலக நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டவர் கமல்ஹாசன். வித்தியாச வித்தியாசமான திரைப்படங்களைக் கொடுத்து அதன் மூலம் கவனத்தை ஈர்த்த கமல்ஹாசன் விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார்.
அவரது திரையுலக பயணத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்கள் இருக்க, சின்னத்திரையிலும் தோன்றி அசத்தினார் கமல்ஹாசன். இதற்கு முத்தாய்ப்பாக அமைந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. சொல்லப்போனால் கமல்ஹாசனை ஒவ்வொரு இல்லத்திற்கும் அந்த நிகழ்ச்சி அழைத்துச் சென்றது என்று கூறலாம்.
இதுவரை அந்த நிகழ்ச்சியின் ஏழு பாகங்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை சின்னத்திரையில் தோன்றும் கமல்ஹாசன், ஏராளமான புதிய தகவல்களுடன் மக்களை சந்திப்பார். சிறந்த புத்தகங்களை கூறி அதில் தனது படித்த அனுபவத்தையும் எடுத்துரைத்து அதனை வாசிக்கக் கூறுவார் கமல்ஹாசன்.
போட்டியாளரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், அவர்களது போக்கிலேயே அனைத்தையும் கேட்டு அதில் என்ன நடந்தது என்பதை சரியாக உள்வாங்கிக் கொண்டு அதன்படி அந்த நிகழ்ச்சியை அவர் நடத்துவார். குறிப்பாக நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அணியும் உடைகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக நெருக்கமானவராகவே இருந்து வந்தார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் எட்டாவது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் சூழலில், அதிலிருந்து விடைபெறுவதாக திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். வெள்ளித்திரையில் அவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்புக் கொண்டிருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என சரியாக நேரம் ஒதுக்க முடியாது என்ற காரணத்தை எடுத்துரைத்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான விடையை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





