விஷாலுக்கு அண்மை காலங்களில் வெளியான திரைப்படங்கள் பலவும் தோல்வியையே சந்தித்தன. சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்த திரைப்படங்களில், வெற்றி பெற்றதை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வளவுதான், விஷாலின் சினிமா கேரியர் முடிந்துவிட்டது என்று பலரும் கூறிவந்த சமயத்தில், மார்க் ஆண்டனி வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டைம் டிராவலை மையமாக வைத்து, அதில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் திரைக்கதையை மிகச் சரியாக கொடுத்து அசர வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
அது மட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் குவித்தும் சாதனை படைத்தது. விஷாலுக்கு திருப்புமுனையாக மார்க் ஆண்டனி அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ஹரியுடன் மூன்றாவது முறையாக கை கொடுத்தார் விஷால். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை என இரண்டு திரைப்படங்களுமே வெற்றி பெற்றன.
இதன் காரணமாக விஷால் – ஹரி கூட்டணியில் மீண்டும் உருவான ரத்னம் திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வழக்கமான திரைக்கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இப்படியான சூழலில் இந்த ஆண்டு தொடக்கத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஷாலுக்கு மதகஜராஜா திரைப்படம் வெளியானது.
சுந்தர் சி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பெட்டியிலேயே முடங்கி கிடந்தது. இதன் பிறகு 12 ஆண்டுகள் கடந்து, கடந்த பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட ரசிகர்கள் அதனை கொண்டாடினார்கள். படத்தில் சந்தானத்தின் காமெடி மிகச் சரியாக கிளிக் ஆனதே, மதகஜராஜா வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் அடுத்ததாக விஷால் மகுடம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதர்வாவை வைத்து ஈட்டி, ஜிவி பிரகாஷை வைத்து ஐங்கரன் ஆகிய திரைப்படங்களை கொடுத்த ரவியரசு இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. படத்தில் விஷாலுக்கு மூன்று கெட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.





