ஒரு சில படங்களில் நடித்து அந்த படங்களும் வெற்றி பெற்று விட்டால் நடிகர் நடிகையர் செய்யும் அலப்பரை தாங்க முடியாததாக இருக்கும். சினிமாவில் நடிக்க வரும் முன், பஸ்சில் செல்லவே கையில் காசு இல்லாத ஒரு வறுமை நிலையில் வாழ்ந்தவர் கூட, நடிகராகி விட்டால் காரில் ஏசி இல்லாவிட்டால் அந்த காரில் வர மாட்டேன் என்று சொல்வதும் கூட நடந்திருக்கிறது.
இதற்கு உதாரணமாக நடப்பு காலத்தில் உள்ள நடிகர் வடிவேலுவை சொல்லலாம். என் ராசாவின் மனசிலே படத்தில், நடிகர் வடிவேலுவை நடிகராக அறிமுகம் செய்ததே அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர் ராஜ்கிரண்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தில், நான் நடிக்க மாட்டேன் என்று கூறி இயக்குநர் பி வாசுவிடம் அடம்பிடித்து இருக்கிறார் வடிவேலு.
நடிகர் வெற்றி, பலருக்கும் பரிச்சயம் ஆகாத ஒரு நடிகர். இப்போதுதான் சில படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வருகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி என 2 படங்களில் நடித்திருக்கிறார். இவரது தந்தை தயாரிப்பாளர் என்பதால் இந்த 2 படங்களிலும் நடிக்க அவருக்கான வாய்ப்பை அவரே உருவாக்கி கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வெற்றி, வாரணாசியில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டு இருக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தை தயாரிக்கிறார். ரூ. 2.5 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்ட இந்த படம் இப்போதே ரூ. 5 கோடியை கடந்து விட்டதாம்.
நடிகர் வெற்றி, இன்னும் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு வளரும் நடிகராக தான் இருக்கிறார். அவரது படங்கள் எதுவும் இதுவரை பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. இன்னும் பலருக்கு நடிகர் வெற்றி என்றால் யாரென்று தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை.
இந்நிலையில், இப்போது நடித்துவரும் இந்த படப்பிடிப்பில் ஏகப்பட்ட அலப்பரை செய்து படக்குழுவினரை அப்செட் செய்து வருகிறார். காலையில் டிபனாக எனக்கு இட்லி, வடை வேண்டும். அது இருந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என அடம்பிடித்து இருக்கிறார். வடநாட்டில் இட்லி, வடையை பல இடங்களில் தேடி கண்டுபிடித்து போராடி வாங்கி வந்து தந்திருக்கின்றனர். அதை சாப்பிட்ட பிறகே படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருக்கிறார் வெற்றி. ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டால், இவரை கையில பிடிக்க முடியாதுப்பா என படக்குழுவினர் எரிச்சலாக கலாய்த்துள்ளனர்.





