கடந்த மாதம் பிப்ரவரி 22ம் தேதி வெளியான மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு, 10 பேர் அடங்கிய நண்பர் குழு, டூர் வருகிறது. அப்போது குணா குகையை வேடிக்கை பார்க்கச் செல்கின்றனர். அங்குள்ள ஆபத்தான, அனுமதி மறுக்கப்பட்ட பகுதிக்குள் அத்து மீறி நுழைகின்றனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த நண்பர்களில் ஒருவர், அங்குள்ள அதலபாதாள சுரங்கத்துக்குள் கால்தவறி விழுந்து விடுகிறார். டெவில் கிச்சன் என அழைக்கப்படும் அந்த சுரங்கத்துக்குள் விழுந்த அவர் உயிருடன் மீட்கப்பட்டாரா, இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை டைரக்டர் சிதம்பரம் இயக்கி இருக்கிறார்.
இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இதுவரை உலகம் முழுவதும் ரூ. 150 கோடியை வசூலில் கடந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு தொடர்ந்து மீண்டும் மீண்டும் செல்லும் ரிபீட் ஆடியன்ஸ் கூட்டத்தில் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய விஷயமாக குணா குகையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கமல் படம் குணா. அதனால்தான் அந்த குகைக்கே குணா குகை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும், இந்த படத்தில் பெரிய டிரண்டிங் ஆகி மாறிவிட்டது. குறிப்பாக கிளைமேக்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து தமிழ் சினிமாவில் மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மலையாள படம் ஒன்றை இயக்கி விட்டு, தனுஷ் படத்தை அவர் இயக்க உள்ளார். அதே போல் நடிகர் சியான் விக்ரமும், சிதம்பரத்தை நேரில் அழைத்து பேசியுள்ளார். மற்றொரு தயாரிப்பாளரும், சிதம்பரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் சனி ஞாயிறு தினங்களில் 9, 10ம் தேதிகளில் கேரளாவில் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் மொத்த வசூல் ரூ. 78 லட்சம் என்ற நிலையில், தமிழ்நாட்டில் அந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ. 2 கோடியை கடந்துள்ளது. படம் ரிலீசாக இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் ரூ. 2 கோடி வசூல் என்பது பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை வசூல் 40 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.





