நடிகர் கார்த்திக், நவரச நாயகன் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பல பரிமாணங்களை காட்டக் கூடிய மிகச் சிறந்த கலைஞர். நடிப்பில் மட்டும் அவர் முழு கவனம் செலுத்தி இருந்தால் அவர் தொட்டிருக்க வேண்டிய உச்சங்கள் மிக அதிகம்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு கார்த்திக், நடிப்பில் போதிய ஆர்வம் காட்டவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவுட்டோர் ஷூட்டிங் நேரத்தில் ஷூட்டிங்குக்கு வராமல் லாட்ஜ் அறையில் படுத்துக்கொண்டார். தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை பல விதங்களில் சோதித்தவர் என பல புகார்கள் அவர் மீது உண்டு.
ஆனால் அதே நேரத்தில் அவர் நடித்த படங்களில் எல்லாம் மிகச்சிறந்த தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நவரச கார்த்திக் நடிப்பில் உள்ள மிகப்பெரிய தனித்துவமே அவர் நடிப்பில் யாருடைய சாயலுமே இருக்காது. அவர் நடிப்பே அவருக்கு மட்டுமே உரித்தான தனித்துவத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நாடாளும் மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை துவக்கினார் நடிகர் கார்த்திக். ஆனால் தமிழக அரசியலில் அவரது கட்சி துவக்கமோ, அவரது அரசியல் வருகையோ எந்த சலசலப்பையும் சிறு மாற்றத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தேர்தல் நேரத்தில் மட்டுமே, அப்படி ஒரு கட்சி இருப்பதே வெளிச்சத்துக்கு வரும்.
இந்நிலையில், சென்னை விமான நிலையில் நேற்று நவரச நாயகன் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகா் கார்த்திக் பேசுகையில், விருதுநகர் தொகுதியில் எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் நிற்கிறார். அதே போல் எனது நண்பர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவும் எனக்கு தெரிந்தவர்தான். அவரும் வரட்டும். இதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகர் விஜய் தம்பி அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, அரசியலுக்கு வருவது ரொம்ப நல்ல விஷயம். மூத்த சகோதரனாக அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடியுங்கள். அப்போதுதான் உங்களது கருத்துகள் மக்களிடம் எளிதாக சென்று சேரும் என்றும் கூறியிருக்கிறார்.





