நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முற்றிலுமாக முடித்து விட்டார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது.
தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியார் என பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தாலும், ரஜினி ரசிகர்களை பொருத்த வரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள கூலி படம் குறித்துதான் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம், அவர் இயக்கத்தில் வெளிவந்த கைதி, விக்ரம் படங்களில் அவர் காட்டிய மிகப்பெரிய மாஸ்தான். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை டைரக்ட் செய்யும் அவர், இதுவரை இல்லாத அளவில் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் புகழ் கிடைக்கும் வகையில், அந்த படத்தை வேற லெவலில் தருவார் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் கூலி படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதில் சத்யராஜ் நடிப்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகி உள்ளது. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினி, சத்யராஜ் இணைந்து நடித்திருந்த நிலையில், 38 ஆண்டுகளுக்கு பிறகு கூலி படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது நல்ல ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் படங்களை பொருத்த வரை ஹீரோயிசம்தான் முக்கியமாக இருக்கும். கதாநாயகி என்பவர், படத்தில் ஊறுகாய் போல தான் பயன்படுவார். குறிப்பாக கைதி படத்தில் கதாநாயகியே இல்லை. விக்ரம் படத்திலும் கமலுக்கு ஜோடி இல்லை. லியோ படத்திலும், திரிஷாவுக்கான காட்சிகள் மிக குறைவுதான்.
அதனால், கூலி படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி என்ற கேள்வி, ரசிகர்களிடையே பலமாக எழுந்துள்ளது. இதில் தளபதி மற்றும் சிவா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி தான் கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி என்ற தகவல் கிடைத்துள்ளது. கடைசியில் கமலுக்கு மிகவும் பிடித்த விருமாண்டி நாயகியை இயக்குனர் பிடித்து விட்டாரே, என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.





