அஜித் – மகிழ்திருமேனி கூட்டணியில் ரேசிங் திரில்லராக எடுக்கப்பட்டு வருகிறது விடாமுயற்சி. கடந்த ஆண்டு மே மாதமே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானாலும், அக்டோபரில் தான் படப்பிடிப்புக்காக அனைவரும் கிளம்பினார்கள். அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.
இதில் அஜித்திற்கு மனைவியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லனாக அர்ஜுன் நடித்து வருகிறார். இதுபோக பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஆரவ் மற்றும் ரெஜினா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் இதில் முடிவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில், அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. திடீரென காணாமல் போகும் தனது மனைவியை அஜித் கண்டுபிடிப்பதுதான் இதன் கதைக்களம் என்று கூறப்படுகிறது. இதில் அர்ஜுன் வில்லனாக நடிப்பதாகவும் தெரிகிறது.
இதற்கான சூட்டிங் பணிகள் கடந்த அக்டோபர் முதல், நான்கு மாதங்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதன் பிறகு திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கான எந்த காரணமும் சொல்லவில்லை. பட்ஜெட் பிரச்சினைக்கு காரணமாக படத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதினர்.
அதேசமயம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் உடன் அஜித்திற்கு ஏற்பட்ட மனஸ்தாபம் காரணத்தினாலேயே பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி என்பதற்கு போலயே, அடுத்த கட்ட படப்பிடிப்பை மகிழ் திருமேனி தொடங்கினார். இதற்கான சூட்டிங் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. ஆனால் திடீரென அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை திரும்பினார். தனது மனைவி ஷாலினியின் அறுவை சிகிச்சைக்காக அவர் வந்திருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விடாமுயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அந்த முதல் போஸ்டர் ரசிகர்களை கவரவில்லை. தற்போது படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. அஜித் டென்ஷனாக கார் ஓட்டுவது போலவும், கையில் துப்பாக்கியை வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த போஸ்டர்கள் மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். மேலும் படத்திற்கான, ரிலீஸ் தேதிக்கும் அவர்கள் காத்திருக்கின்றனர்.





