பக்கத்து வீட்டில் சண்டை நடந்தால் அதை வேடிக்கை பார்ப்பது பலருக்கும் ஜாலியான பொழுதுபோக்காக இருக்கும். நடுரோட்டில், தெருவில் சண்டையிட்டுக் கொள்வதையே சிலர், சினிமா படம் போல ஆர்வமாக நின்று பார்க்க துவங்கி விடுவர். அதிலும் பெண்கள் போடும் குழாயடி சண்டையை காண்பதில் பலரும் அலாதி இன்பம் அடைவர்.
ஒரு வீட்டுக்குள் 20 பேரை போட்டியாளர்களாக அனுப்பி வைத்து, அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள செய்து, அதை பார்வையாளர்கள் சுவாரசியமாக பார்த்து ரசிப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் வாரம் ஒருமுறை வந்து, அவர்களுக்குள் போட்ட சண்டையை பஞ்சாயத்து செய்வதாக கூறி இன்னும் நன்றாக பிரச்னையை தூண்டிவிட்டு செல்வதுதான் தொகுப்பாளரின் முக்கிய வேலை.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் என்ற பெயரில், போட்டியாளர்களுக்குள் சண்டை மூட்டி விடுவது, அவர்களுக்குள் இன்னும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிட்டு சண்டையை பெரிதுபடுத்துவது, நியாயமாக நடந்துகொண்டவர்களை குற்றவாளியாக்குவது, தப்பு செய்தவர்களை நியாயப்படுத்துவது என பல விஷயங்களை பிக்பாஸில் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்துமே அந்த நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காக யுக்திதான் என தெரிந்தாலும், ரசிகர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ரசிக்கின்றனர். சில நாட்களுக்கு ஏனோதானோ என விருப்பமின்றி பார்க்கும் பலரும், அடுத்த சில நாட்களில் நிரந்தர பார்வையாளர்களாக மாறி தினமும் பிக்பாஸ் ஒளிபரப்பை காண தயாராகி விடுகின்றனர். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்து வருகிறது.
இதுவரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை, இந்த சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கேப்ஷனுடன் இந்த முறை போட்டியாளர்களுக்கு பஞ்சாயத்து செய்யும் கேரக்டரில் பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுக்கிறார்.
மேலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர்கள், மற்றும் மக்கள் நேருக்கு நேர் சந்தித்து விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சியை பிக்பாஸ் ஏற்பாடு செய்துள்ளார். அதை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இது புதுமையான நிகழ்ச்சியாகவும், மேலும் பார்வையாளர்களை வெகுவாக கவரும்படியாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.





