தொடர் வெற்றி படங்களை கொடுத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கும்போதே, நற்பணிகளை செய்து வந்தார் நடிகர் விஜய். பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விஜயும் அவரது ரசிகர்களும் தொடர்ந்து கொண்டு வந்தனர்.
இதற்காக தளபதி மக்கள் இயக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் அவரது ரசிகர்கள் இதனை செய்து வந்தனர். பிறகு கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடந்த போது, விஜய் ரசிகர்களும் சில வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இப்படியான சூழலில் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறி வந்தனர்.
இது வெறும் பேச்சு அல்ல உண்மைதான் என்பது போலவே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார் விஜய். அப்போது வெளியிட்ட அறிக்கையில் அரசியலில் ஆழ மட்டுமல்ல அகல நீளத்தையும் தெரிந்து கொண்டு தான் வந்திருப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது தான் தனது இலக்கு என்றும் கூறியிருந்தார்.
இதற்காக தனது பட விஷயங்களை அவர் கைவிட முடிவு செய்து இருக்கிறார். தற்போது வினோத்துடன் அவர் பணியாற்றி வரும் படம் தான் இறுதி திரைப்படமாக இருக்கும். இதற்குப் பிறகு அவர் முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். இதற்காக தனது முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27 ஆம் தேதி நடத்துகிறார்.
இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பாளர்களையும் விஜய் அறிவித்திருக்கிறார். மொத்தம் 30 குழுக்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில் விஜய், இரண்டு மணி நேரம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் அவர் என்ன சொல்ல வரப்போகிறார் என்பதை தான் தற்போது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. அவரின் கட்சி கொள்கையும் என்ன என்பது அன்றைய தினம் தெரிந்து விடும். இப்படியான சூழலில் மாநாட்டில் விஜயின் கட் அவுட்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அதில் விஜயின் படத்திற்கு அருகே, மறைந்த மூத்த அரசியல் தலைவர்கள் பெரியார், காமராஜர் மற்றும் அம்பேத்கர் ஆகியோர்களின் கட்டவுட்களும் இடம் பெற்றுள்ளன.





