காமெடி கலந்த ஹீரோவாக பல படங்களில் நடித்தவர் மிர்ச்சி சிவா. குறிப்பாக தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களை கலாய்த்து அவர் நடித்த தமிழ்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. சென்னை 28, சென்னை 28 படம் 2ம் பாகம், கலகலப்பு, கலகலப்பு 2, வணக்கம் சென்னை, சரோஜா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்ததாக சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் நடிகர் மிர்ச்சி சிவா சமீபத்தில் பங்கேற்று, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதில் பதிலளித்து பேசினார். இதில் பல விஷயங்களை அவர் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 முதல் பாகம், 2ம் பாகம் படங்களை முடித்த பிறகு அடுத்ததாக நான் கமிட் ஆனது தமிழ்படம். அப்போது வெங்கட்பிரபு கோவா படத்தை இயக்கினார். அதனால் அந்த படத்தில் நடிக்க நானும் போகவில்லை. அவரும் என்னை அழைக்கவில்லை. இருவருமே அப்போது பிஸியாக இருந்தோம். ஆனால் அந்த 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸானது.
ஒரு படத்தில் போய் கேமியோ ரோலில் நடிப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படம் பண்ணும் போது அந்த படத்தில் நாம என்ன பண்ண போறோம், என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்று கேட்போம். சும்மா அப்படியே வந்துட்டு போற காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை.
ஆனால் கோ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நிறைய நடிகர்கள் வந்து போவது போன்ற ஒரு காட்சியில், அந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தேன். அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் கேவி ஆனந்த் சார். அவர் கேட்டதால் நான் மறுக்க முடியவில்லை. தி கோட் படத்தில் நடிக்க என்னை வெங்கட்பிரபு என்னை கேட்கவில்லை.
அப்படியே கேட்டிருந்தாலும், அந்த படத்தில் போய் நாம என்ன பண்ண போறோம். அது விஜய் சார் படம். முழுக்க முழுக்க அவரோட ரசிகர்கள்தான். அதனால்தான் சும்மா வந்துட்டு போவது போன்ற ஒரு காட்சியில் நான் கெஸ்ட் ரோலில் எந்த படத்திலும் நடிக்க விரும்புவது இல்லை என்று வெளிப்படையாக நடிகர் மிர்ச்சி சிவா பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





