தமிழ் சினிமாவில் காக்க காக்க மின்னலே வேட்டையாடு விளையாடு வாரணம் ஆயிரம் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் லியோ விடுதலை விடுதலை 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான படம் துருவ நட்சத்திரம். நிதியாதாரம் கடன் உள்ளிட்ட சில பிரச்னைகளால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் கௌதம் மேனன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த டாம்னிக் படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, நடிகர் சூர்யாவிடம் துருவநட்சத்திரம் படத்தின் கதையைச் சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு, இந்த படத்துக்கு என்ன ரெஃபரன்ஸ் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இந்த படம் நானே உருவாக்கியுள்ளேன்.
இது என்னுடைய கற்பனையில் உருவான படம். துருவ நட்சத்திரம் படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க யோசித்திருக்கவே கூடாது. காக்க காக்க வாரணம் ஆயிரம் படங்களில் அவர் என்னை முழுமையாக நம்பினார். ஆனால் இந்த படத்தில் அவர் என்னை நம்பவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் நான் இருந்தேன். துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடித்தால் என்ன ஆகிவிடும், அடுத்த பட வாய்ப்பு சூர்யாவுக்கு வராமல் போய்விடுமா, அவர் என்னை நம்பவில்லை.
அவருக்கு காக்க காக்க வாரணம் ஆயிரம் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனரை அவர் நம்பவில்லை. எனக்கு பேஃவராக கூட நான் எதுவும் கேட்கவில்லை. உங்களுக்கு இந்த கதை பிடிக்காமல் போயிருக்கலாம். புரியாமல் இருக்கலாம். ஆனால் என்ன, நான் தான்தோன்றி தனமாகவோ தலைக்கனத்துடனோ எதையும் செய்யவில்லை. துருவ நட்சத்திரம் போன்ற படத்தை உலக தரத்தில் கொடுக்க நினைத்தேன். அவ்வளவுதான்.
இந்த படத்தில் யார் வேண்டுமானாலும் பணியாற்ற முடியாது என்று கூறியிருக்கலாம். ஆனால் சூர்யா நடிக்க மாட்டேன் எனக் கூறியது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. அப்படி நடித்திருந்தால் என்ன தப்பாகி போய்விடும் என்று கௌதம் மேனன் ஆதங்கமாக பேசி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





