நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி கூலி படம் வெளியானது. பல்வேறு கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 மற்றும் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படங்களை தொடர்ந்து 3வது படமாக கூலி படமும் ரூ. 500 கோடி வசூலை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
ஆனால் கூலி படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினியுடன் உபேந்திரா நாகர்ஜூனா சௌபின் சாஹிர் சத்யராஜ் அமீர்கான் ஸ்ருதிஹாசன் என மல்டிபிள் ஸ்டார்ஸ் நடித்திருந்ததால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
கார்த்தி நடித்த கைதி கமல் நடித்த விக்ரம் படங்கள் போல கூலி படத்தையும் லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவமாக தந்திருப்பார் என ரசிகர்கள் கருதினர். ஆனால் கதை திரைக்கதையே இல்லாமல் படம் முழுக்க லாஜிக் மிஸ்டேக்குகளுடன் ரஜினியை மட்டுமே நம்பி அவர் படத்தை எடுத்திருப்பது கண்டு ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
ஆனால் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. நிச்சயமாக இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நடிகை வித்யா பாலன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இப்போது நடந்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் அவரும் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு மனைவியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் என கிண்டல் செய்யப்பட்டாலும் இந்த படம் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக திரைக்கதையிலும் காட்சிகளிலும் நெல்சன் அதகளம் செய்திருந்தார். அனிருத் இசையில் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்தார். இப்போது வித்யாபாலன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.





