பூக்கடைக்கும் மீன் கடைக்கும் விளம்பரம் தேவையில்லை என்று சொல்வார்கள். ஏனென்றால் பூக்களின் வாசனையும் மீன்களின் வாசமும் அதன் இருப்பிடத்தை தானாகவே சொல்லிவிடும். அதுபோல ஒரு சிறந்த படம் அதற்கான வெற்றியை தானாக அதுவே தேடிக் கொள்ளும் என்றும் சொல்வார்கள்.
ஏனென்றால் ஒரு நல்ல திரைப்படம் ரசிகர்களாலேயே விரும்பி ரசிக்கப்படும் போது அவர்களாலேயே அது விளம்பரப்படுத்தப்பட்டு அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. ஒரு படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு தான் முதல் விளம்பரம். ஆனால் இப்போது எல்லாம் படங்களை பிரமோஷன் என்ற பெயரில் விளம்பரப்படுத்துகின்றனர். இதுற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யும் நிலைக்கு இந்திய சினிமா தள்ளப்பட்டுள்ளது.
அதுவும் இப்போது ஒரு பான் இந்தியா படத்துக்கு விளம்பரத்திற்காக மட்டுமே 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய் பல்லவி கேஜிஎஃப் நடிகர் யஷ் ஆகியோர் நடிப்பில் பாலிவுட்டில் தயாராகி உள்ள படம் இராமாயணா. இதில் சீதா தேவியாக நடிகை சாய்பல்லவி நடிக்கிறார்.
இந்த படத்தை ஒரு உலகளாவிய படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க அதன் தயாரிப்பு நிறுவனம் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி இராமாயணா படத்தின் விளம்பர பணிகளுக்காக மட்டுமே சுமார் 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சர்வதேச விநியோக உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அதனால் உலகளவில் மிகப் பிரமாண்டமான முறையில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த விளம்பர பிரச்சாரத்தின் பிரம்மாண்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும் படத்தில் அடங்கியுள்ள நிதி சார்ந்த ஆபத்துகள் குறித்த கேள்விகளையும் இது எழுப்பி உள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால் அந்த செலவை மீட்டெடுக்க இந்த படம் திரையரங்க வசூலில் மிகச் சிறப்பான சாதனையை படைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் படக்குழுவினர் இந்த படத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கையுடன் உள்ளனர். நட்சத்திர நடிகர்களின் பட்டாளம் பிரம்மாண்டமான காட்சிகள் நம் வரலாற்று கதைக்களம் ஆகியவற்றுடன் உருவாகும் இராமாயணா படம் இந்திய சினிமா இதுவரை கண்டிராத மிகப்பெரிய திரைப்படமாக உருவாகி இருப்பதால் இந்த படம் உலக ரசிகர்களை கவர்ந்திருக்க கூடியதாக இருக்கும் என்று இராமாயணா படக்குழு முழுமையாக நம்புகிறது. ஆனால் அதற்காக 375 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடப்படுவது சரியா என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.





