அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தை, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். கடந்த 4ம் தேதி, அஜர்பைஜானுக்கு படப்பிடிப்புக் குழு புறப்பட்டு சென்றது. ஒரு வாரமாக, படத்தின் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. அஜீத் உடன் திரிஷா, ரெஜினா கான்சன்ட்ரா உள்ளிட்ட நடிகை, நடிகையர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜீத் தந்தை -மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒருவருக்கு திரிஷா, மற்றொருவருக்கு ரெஜினா கான்சன்ட்ரா ஜோடியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜர்பைஜானில் பல நாட்கள் ஷூட்டிங் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், தமிழ்நாட்டுக்கு அவர்கள் விரைவில் ரிடர்ன் டிக்கெட் எடுக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
வலிமை படத்துக்கு பிறகு, அஜீத் நடித்த படம் துணிவு. அந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பதாக இருந்தது. அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என்பதால், அவரை விலக்கி விட்டு, அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜீத்குமார் வாய்ப்பளித்தார்.
படத்தின் ஷூட்டிங் துவங்க திட்டமிட்டு இருந்த நிலையில், அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியன் திடீரென காலமானதால், அதையடுத்து சில மாதங்கள் அஜீத் குமார் விடாமுயற்சி படத்தை துவங்குவது தள்ளிப் போனது. தொடர்ந்து பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதே பெரிய போராட்டமாக இருந்தது. படப்பிடிப்பை தள்ளி தள்ளி போட்டதால், இந்த படம் எடுக்கப்படுமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான், பல மாதங்களுக்கு பிறகு ஒருவழியாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் உறுதி செய்யப்பட்டு, கடந்த வாரத்தில் விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சூழலில், ஒரு வாரமே படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், திடீரென இந்த புதிய சிக்கல் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதாவது, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் மிக உச்சக்கட்டத்தில் நடந்துவருகிறது. இதன் பாதிப்பு அஜர்பைஜானுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், அங்குள்ள சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற சொல்லும் ஒரு சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. அதனால், விமான போக்குவரத்து போன்றவை தடை செய்யப்படவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
போர் சூழல் காரணமாக, அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அஜர்பைஜான் சென்றுள்ள அஜீத் படக்குழுவை வெளியேறச் சொல்லவும் அதிக வாய்ப்புள்ளது. அப்படி சொன்னால், தமிழ்நாட்டுக்கு ரிடர்ன் டிக்கெட் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. இப்படி விடாமுயற்சி படத்துக்கு, விடாமுயற்சியாக கடுமையான சோதனைகள் தொடர்வதால், படக்குழுவினரும், ரசிகர்களும் பலத்த கவலையில் உள்ளனர்.





