வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதிக கன மழை பெய்துள்ளது. குறிப்பாக பெருங்குடியில் 45 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்து இருத்தது. இது மட்டுமல்லாமல் ஆவடியில் 28 சென்டிமீட்டர் என நகரின் பெரும்பாலான பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்துள்ளது. அதிகளவு மழை பெய்ததன் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
குறிப்பாக வேளச்சேரி மடிப்பாக்கம் பள்ளிக்கரணை பகுதிகளில் பாதிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். முடிச்சூர் பகுதியில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பலரும் உணவின்றி தவித்து வர தங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதுவும் குழந்தை வைத்திருப்பவர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இப்படியான சூழலில் நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டிலும் வெள்ள நீர் சூழ்ந்திருக்க, உதவி கூறி எக்ஸ் வலைதளத்தை தொடர்பு கொண்டார்.
அதில், காரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. அதன் நீர்மட்டமும் மோசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. மின் வசதி இணைய வசதி என எதுவுமே இல்லை. மாடியின் மேற்பகுதியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிக்னல் கிடைக்க அங்கிருந்து இந்த தகவலை அனுப்புகிறேன். எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் காரப்பாக்கத்தில் உள்ள விஷ்ணு விஷாலின் இல்லத்திற்கு படகுமூலம் விரைந்தனர். நடிகர் உட்பட அவரது குடும்பத்தினர் படகுமூலம் மீட்கப்பட்டனர். அதில் ஹிந்தி நடிகர் அமீர் கானும் இருந்தார். அமீர்கான் தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக இங்கு தங்கி இருக்கிறார்.
ஆனால் அவர் விஷ்ணு விஷால் வீட்டில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் அவர் படகில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. அவர் நினைத்திருந்தால் தான் வெள்ளத்தில் சிக்கி இருப்பதை பெரிதுபடுத்தி இருக்க முடியும் என்றும் ஆனால் அவர் அதை பண்ணவில்லை என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். மீட்கப்பட்ட பிறகு தமிழக அரசுக்கும், மீட்பு படையினருக்கும் விஷ்ணு விஷால் நன்றிதெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.





