நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான படம் இட்லிகடை. வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இட்லிகடை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகர் தனுஷ் பங்கேற்று பேசி வருகிறார். அந்த நிகழ்ச்சிகளில் சின்ன வயதில் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த கஷ்டங்களை பண பிரச்னைகளை அவரது குடும்பம் பட்ட அவமானங்கள் குறித்து நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசி வருகிறார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட நடிகர் தனுஷ் படங்களில் நடித்திருந்தாலும் இப்படி குடும்ப விஷயங்களை நடந்த சம்பவங்களை பகிரங்கமாக நடிகர் தனுஷ் பொதுவெளியில் பேசியதில்லை. அவருடைய சின்ன வயது வாழ்க்கையில் இருந்தும் தனது சொந்த ஊரான தேனி பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்தும் இட்லி கடை படத்தின் கதையை எடுத்திருப்பதாகவும் தனுஷ் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் விசுவிடம் உதவியாளராக பணி செய்தவர் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா. அவருக்கு செல்வராகவன் தனுஷ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். ஒரு காலகட்டம் வரை அந்த குடும்பம் வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறது. கஸ்தூரிராஜா இயக்குனராகி ஓரளவு பிரபலமான பிறகு தான் வாழ்க்கையில் வசதியை பெற்றிருக்கிறார்கள்.
அதன்பின்னரும் சில படங்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்ததால் கஸ்தூரிராஜா கடனாளியாகி மீண்டும் அவர்கள் கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் நடிகர் தனுஷ் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு குடும்பம் பொருளாதார ரீதியாக வறுமையில் இருந்து முற்றிலுமாக மீண்டு விட்டது. இப்போது நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் சகோதரிகள் என அனைவருமே கோடீஸ்வரர்களாக வாழ்கின்றனர்.
ஆனாலும் நடிகர் தனுஷ் தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை அவமானங்களை இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் மறக்காமல் இட்லி கடை பட விழா மேடைகளில் தயங்காமல் பேசி வருகிறார். இட்லி கடை படத்தின் பல காட்சிகளை தனது வாழ்வில் நடந்த துன்பங்கள் துயரங்களையே வெளிப்படையாக அவர் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் நடந்த இட்லிகடை பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியதாவது, பொழப்பு தேடி சென்னைக்கு வரலாம் என எங்க அப்பா முடிவு பண்ணினப்ப பஸ்ல வரக்கூட கையில் காசு இல்ல. மதுரையில் இருக்கிற சொந்தக்காரங்க கிட்ட காசு வாங்கிட்டு போலாம் என்று நினைத்தால் மதுரைக்கு பஸ்ல போகக் கூட கையில காசு இல்ல. அப்போ செல்வராகவனுக்கு நாலு வயசு, அம்மா மூணு மாசம் கர்ப்பம். அந்த நிலமையில் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் மதுரைக்கு நடந்தே போனாங்க. அப்படி அம்மா அப்பா கால் கடுக்க நடந்து வந்து தந்த மேடை தான் இது என்று நடிகர் தனுஷ் அந்த விழாவில் உருக்கமாக பேசியிருக்கிறார்.





