தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். வருகிற பொங்கலுக்கு அவர் நடித்த பராசக்தி படம் வெளியாக உள்ளது. முன்னதாக பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னையில் அந்த விழா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது திருச்சி அல்லது மதுரையில் அந்த விழா நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பராசக்தி படமும் அமரன் படத்தை போல, நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைக்களத்தில் உருவான படம்தான். இந்த படத்தை சுதா கொங்கரா டைரக்ட் செய்திருக்கிறார். மொழிப்போர் தியாகி ராசேந்திரனின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம் என்று சொல்லப்படுகிறது. இதில் நடிகர்கள் ரவி மோகன் அதர்வா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, எப்போதுமே நான் என்னுடைய ரசிகர்களை சகோதர சகோதரிகள் என்றுதான் சொல்வேன்.
அவர்கள்தான் என்னுடைய குடும்பம். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களே முக்கிய காரணம். என்னை வணங்கும் ரசிகர்களை நான் விரும்புவதில்லை. கடவுளையும் பெற்றோரையும் மட்டுமே வணங்க வேண்டும். அதுதான் முக்கியம். நிறைய எதிர்மறை எண்ணங்கள் பரவி வரும் இன்றைய சூழலில் அதையெல்லாம் தவிர்த்து விட்டு நேர்மறையான மனநிலையுடன் ரசிகர்கள் இருக்க வேண்டும்.
நேர்மறையான மனநிலை ரசிகர்கள் மத்தியில் இருந்தால்தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். என்னுடன் ஒரு சகோதரனைப் போல பழகக்கூடிய ரசிகர்கள் தான் எனக்கு இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். சமூக வலைதளங்கள் என்றாலே தேவை இல்லாத விஷயங்களை தருகிறது என்கிற ஒரு பயம் எனக்குள் உருவாகி இருக்கிறது.
நான் சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறேன். ஆனால் நான் எதையும் பயன்படுத்துவதில்லை. அதற்கென ஆட்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டா மட்டும் பயன்படுத்தி வந்தேன். ஆனால் அதிலும் கைதவறி ரீபோஸ்ட் செய்து விடுவேன் என்ற பயத்தில் இப்போது அதையும் நான் பயன்படுத்துவதில்லை. மேலும் அங்கு இருக்கும் தகவல்கள் சரியானதா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





