நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில், இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், திருவனந்தபுரத்தில் பரபரப்பாக மூன்று வாரங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் முகாமிட்டு கடந்த இரு வாரங்களாக படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தனர்.
இந்த ஏப்ரல் மாதத்தில், மதுரையில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார் என்று மார்ச் மாதத்தில், தகவல் பரவி வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டதன் காரணமாக, மாநில மாநாடு நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்து கோட் படத்தில் நடிப்பதில் நடிகர் விஜய் தீவிர கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது 69 வது படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார். வரும் ஜூன் 22 ஆம் தேதி, விஜய் பிறந்த நாளில் விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடங்குகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள், படப்பிடிப்பை முடித்துவிட விஜய் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 2025 ஆம் ஆண்டு முதல், விஜய் தனது அரசியல் பணிகளை முழுவீச்சில் துவங்க இருக்கிறார். அதற்கிடையே வரும் மே மாதத்தில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்துவாரா என்பது குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிய வருகிறது.
இதற்கிடையே ரஷ்யாவில் இருந்து நடிகர் விஜய் மட்டுமே சென்னைக்கு புறப்பட்டு விமானத்தில் வந்துள்ளார். வெங்கட் பிரபு உள்ளிட்ட படப்பிடிவினர் இன்னும் ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் தான் இருக்கின்றனர். அவர்கள் வருவதற்கு இன்னும் நான்கு நாட்களுக்கு மேலாகும். அதாவது 20ஆம் தேதிக்கு பிறகு தான் அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
தனது ஜனநாயக கடமையாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஓட்டை பதிவு செய்வதற்காகவே விஜய் படப்பிடிப்பு குழுவை விட்டுவிட்டு, நான்கு நாட்கள் முன்னதாகவே சென்னைக்கு வந்துள்ளார். ஏனென்றால் அரசியல் கட்சி தலைவராகிவிட்ட பிறகு அவர் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால், அது தேவையற்ற சர்ச்சைகளை, பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் விஜய் முன்கூட்டியே திட்டமிட்டு இன்று இரவுக்குள் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.





