நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக கவனிக்கப்படும் முக்கிய நடிகராக இருக்கிறார். நடிகர் கமலை போலவே படத்தில் தனது கேரக்டருக்காக அதிக மெனக்கெடும் ஒரு நடிகர் என்றால் அது சியான் விக்ரம் மட்டுமே. இன்னும் தன் நடிப்பின் ஆர்வம் குறையாமல் இன்னும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிக்க வந்த ஆரம்ப காலத்தில், சினிமாவில் நடிக்க போதிய வாய்ப்பின்றி டப்பிங் கலைஞராக இருந்த சியான் விக்ரமுக்கு, தனது சேது படம் மூலம் ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் டைரக்டர் பாலா. அதைத் தொடர்ந்து பிதாமகன், அன்னியன், ஐ, தூள், ஜெமினி, சாமி, காசி போன்ற பல படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக உருவானவர் சியான் விக்ரம்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்று நடித்த கரிகாலச் சோழன் கேரக்டரில், விக்ரமின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. எப்போதுமே தனது படங்களிலும் தனது தனித்துவமான முத்திரை நடிப்பை பதித்து வருபவர் சியான் விக்ரம். அதனால் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை தருகின்றனர்.
சியான் விக்ரம் இப்போது டைரக்டர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தை ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளனர். வரும் மே மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிப்பில் சியான் விக்ரம் மிரட்டியிருப்பதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம், தனது எக்ஸ் பக்கத்தில், வரும் நாட்களில் நிறைய சுவாரசியமான அப்டேட்களை எதிர்பாருங்கள். அதற்கு மறக்காமல் ஓ போடுங்க என்று பதிவிட்டுள்ளார் இப்படி அவர் பதிவிட்டு இருப்பதைப் பார்த்தால், ஏற்கனவே அவர் நடித்த ஒரு படத்தின் 2ம் பாகம் வெளிவரும் என்று கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
டைரக்டர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஜெமினி. விக்ரமுக்கு ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய அடையாளத்தை இந்த படமும் தந்திருந்தது. எனவே, இந்த படம் இரண்டாம் பாகமாக வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. அதைத்தான் சூசகமாக சியான் விக்ரம், மறக்காம ஓ போடுங்க என்று இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





