நடிகர் அஜித்குமார் இப்போது நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜானில் தொடங்கியது. ஆனால் இதுவரை படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இதற்கு இடையே மூன்று மாதங்களாக படப்பிடிப்பும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும், எப்போது முடியும் என்பதில் தொடர்ந்து குழப்பமும், சிக்கலுமே நீடித்து வருகிறது.
ஏனெனில் துவக்கத்தில் இருந்தே விடாமுயற்சி படம் குறித்து எந்தவிதமான தகவல்களும் அதிகாரபூர்வமாக இருப்பதில்லை என்பதை உண்மை. ஒரு கட்டத்தில் இந்த படத்தை தயாரித்து வரும் லைகா ப்ரொடக்சன் நிறுவனம், படத்தையே பாதியுடன் கிடப்பில் போட்டுவிட்டதாக ஒரு திடுக்கிடும் தகவல் பரவியது.
அதன் பிறகு ரஜினி நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு நடந்து வருவதால், வேட்டையன் படத்தை முடித்து, அந்த படத்தை ரிலீஸ் செய்த பிறகு, அதில் கிடைக்கும் ஒரு பெரிய தொகையில், விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கலாம் என்று லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது.
இதற்கிடையே வேட்டையன் படம் ரிலீஸ் செய்வது குறித்து லைகா புரடக்சன் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் விடாமுயற்சி படப்பிடித்து துவங்க இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு பிறகு அதாவது ஏப்ரல் 20-ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் துவங்கும் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் 20 ஆம் தேதி படப்பிடிப்புக் குழு சொன்னபடி அஜர்பைஜானுக்கு புறப்பட்டு செல்லவில்லை.
இதற்கிடையே மீண்டும் வருகிற 27ஆம் தேதி விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜான் செல்கிறது, அங்குள்ள துறைமுகம் ஒன்றில் படப்பிடிப்பை துவங்கி, அங்கு ஒரு செட்டியூலை முடித்துவிட்டு, பிறகு மீதி படபிடிப்பை சென்னையில் முடித்துக் கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த படத்தில் நடிக்கும் சக, நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு குழு சார்ந்த டெக்னீசியன்கள் உள்ளிட்டோருக்கு அப்படி ஒரு தகவலே இதுவரை இல்லை. அதனால் வரும் 27 ஆம் தேதியும் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடக்க வாய்ப்பில்லை.
தற்போது லைகா நிறுவனம் தயாரித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு மே 15 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிகிறது. எனவே வேட்டையன் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டுதான் அடுத்த கட்டமாக அஜித் படத்தை துவக்கும் திட்டத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தினர் உள்ளனர். மே 15 ஆம் தேதிக்கு பிறகுதான் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். அதற்கு முன்னதாக படப்பிடிப்பை துவங்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிய வந்துள்ளது.





