நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவரது முந்தைய திரைப்படமான துணிவு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அப்போதே அவரது விடாமுயற்சி திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அதனை விக்னேஷ் சிவன் அந்த சமயத்தில் இயக்குவதாக இருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிக்க சம்மதித்தது. ஆனால் கடைசி நேரத்தில் லைக்காவுடன், விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட மோதலால் படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இதன் பிறகு விடாமுயற்சிக்குள் நுழைந்தார் மகிழ் திருமேனி. தடையற தாக்க, தடம் என கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் கில்லாடியான மகிழ் திருமேனி அஜித் இயக்குவதாக அறிவிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் இது எதனையும் கண்டுகொள்ளாமல், தான் உண்டு தனது பைக் உண்டு என்று ஊர் சுற்றுகிற கிளம்பினார் ஏ.கே.
ஜெர்மனி உட்பட உலகின் எந்த பகுதியையும் விடாமல் சுற்றி வந்த அவரை நமது ஆட்கள் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவ்வபோது தான் இருக்கிறேன் என்பது போல், அவர் ஊர் ஊராக சுற்றும் புகைப்படத்தை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இணையதளத்தில் விட்டு வைரலாகும் என நினைத்து பகிர்ந்து வந்தார். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத அஜித் ரசிகர்கள் எப்போது அவர் சூட்டிங்கிற்கு வருவார் என்றே கேள்வி கேட்டு வந்தனர்.
இப்படியான சூழலில் அக்டோபர் மாதம் விடாமுயற்சியில் இறங்கினார் அஜித் குமார். இதன் சூட்டிங் பணிகள், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதையும் கிரைம் திரில்லர் ஜானரிலேயே எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு உள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூன்று மாதங்கள் படப்பிடிப்பில் இருந்து விட்டதால், ஓய்வெடுக்க மீண்டும் கிளம்பி விட்டார் ஏ கே. இதற்காக இந்த முறை அவர் தேர்வு செய்து இருக்கும் இடம் துபாய். அங்கு குடும்பத்துடன் குதூகலிக்கும் அஜித் குமார், புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினார். அவர் கப்பலில் செல்லும் போது, ரசிகர்கள் தல என்று அழைத்த வீடியோவும் வைரலானது. இதை தொடர்ந்து ஓட்டல் ஒன்றையும் அஜித் நடனமாடும் வீடியோவையும் பலர் பகிர்ந்தனர்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், எந்தக் கவலையும் இல்லாமல் தனது வாழ்க்கையை அஜித் வாழ்வதாக பெருமை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட அஜித்குமார், விஜயகாந்த் இறப்பிற்கு கூட செல்லாமல் இப்படி ஊர் சுற்றுவது சரிதானா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இங்கிருக்கும் துபாயில் இருந்து கூட அவரால் செல்ல முடியாதா என்றும் அஜித்துக்கு எதிராக பேசுகின்றனர். இந்த கருத்துக்களால் இணையதளம் சூடு பிடித்துள்ளது.





