இந்திய சினிமாவில் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பிற மொழிகளை சேர்ந்த சினிமா படைப்பாளிகள் பார்த்து மிரண்டு போகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க படைப்பாளிகள் அன்று இருந்திருக்கின்றனர். அதனால்தான் பிற மொழிகளில் முன்னணி நடிகர்களாக நடிகைகளாக இருந்த பலர், தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இயக்குனர்கள் கே பாலசந்தர் பாலு மகேந்திரா மகேந்திரன் மணிரத்னம் பாரதிராஜா கே பாக்யராஜ் போன்றவர்களின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது அவர்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். மொழி கடந்தும் இவர்கள் ஆளுமை மிக்க படைப்பாளிகளே இருந்ததே இதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.
இயக்குனர் பாரதிராஜா கே பாக்யராஜ் டி ராஜேந்தர் போன்றவர்கள், படப்பிடிப்பு தளத்தில் ஸ்கிரிப்ட் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அப்போது என்ன சொல்லி தருகிறார்களோ, அதன்படி நடிக்க வேண்டும். கேமரா முன்பு வசனம் பேசி விட வேண்டும். ஒருமுறை முதல் மரியாதை படத்தில் நடித்த போது சிவாஜி கணேசனே, இயக்குனர் பாரதிராஜாவை பார்த்து டேய் நான் சிவாஜிடா, என்ன சீன் என்றே சொல்லாமல் இப்படி அப்படி நடிக்க சொன்னா எப்படீடா என்று கோபமாக கேட்டிருக்கிறார்.
ஏனென்றால் பாரதி ராஜா கே பாக்யராஜ் போன்றவர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன யோசிக்கிறார்களோ அதை தான் காட்சிகளாக படமாக்குவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை திரைக்கதையில் ஞானமும் அனுபவமும் இருந்தது. இப்போது பார்த்தாலும் அவர்களது படங்களை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க முடிகிறது. அந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார்களே என வியக்க முடிகிறது.
ஆனால் அவர்கள் பாணியில் இப்போது இயக்குனர்கள் பாலா வெற்றிமாறன் போன்றவர்கள், ஸ்கிரிப்ட் எழுதாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டு தடுமாறுகிறார்கள். வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காட்சிகளை எடுத்து விட்டு பிறகு, கதைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று அந்த காட்சிகளை தூக்கி எறிந்து விடுகிறார்கள். அதனால்தான் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படம் வெளியாகி பல மாதங்கள் தாமதமானது.
வணங்கான் படம் எடுத்த போது இயக்குனர் பாலாவும் ஸ்கிரிப்ட் இல்லாமல் அந்த படத்தை படமாக்கிய விதம், படம் பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. பாரதிராஜா கே பாக்யராஜ் போன்றவர்கள் போல் இல்லாமல், பவுண்டர் ஸ்கிரிப்ட் என முழு கதை திரைக்கதை தங்களிடம் கொடுத்தால் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலைக்கு முன்னணி ஹீரோக்கள் வந்துவிட்டனர். இல்லை என்றால், வெறுங்கையுடன் வரும் டைரக்டர்களை பார்த்து தலைதெறிக்க ஓடி விடுகின்றனர்.





