தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக கதை பஞ்சம் நீடிக்கிறது. அதனால் பல படங்கள் மற்ற மொழி படங்களில் இருந்து காப்பியடித்த கதைகளாகவே இருக்கின்றன. பெரும்பாலான படங்கள் சுட்ட படங்களாகவே இருக்கின்றன. சொந்த சரக்கு இல்லாமல் இயக்குனர்கள், மற்றவர்களின் படக் கதைகளை காப்பியடித்து படங்களை தருவது அதிகரித்து விட்டது.
அத்துடன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி பஞ்சம் நீடிக்கிறது. காமெடி நடிகர்கள் பலரும் ஓரிரு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டாலே அதன்பிறகு ஹீரோக்களாக தான் நடிப்பேன் என அடம்பிடிக்கின்றனர். வடிவேலு விவேக் வரிசையில் சந்தானம் சூரி யோகிபாபு என பலரும் ஹீரோக்களாகி விட்டனர்.
அதனால் தமிழ் சினிமாவில் ரெடின் கிங்ஸ்லி மொட்டை ராஜேந்திரன் போன்றவர்கள்தான் காமெடி செய்ய இருக்கின்றனர். அத்துடன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹீரோயின் பற்றாக்குறை நீடிக்கிறது. பல படங்களில் நடிக்க கதாநாயகிகளை வலைவீசி தேடும் நிலைமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
20 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவில் இன்னும் நாயகிகளாக திரிஷாவும் நயன்தாராவும் வலம் வர முக்கிய காரணமே ஹீரோயின் பற்றாக்குறை தான். சில புதுமுக நடிகைகள் நடித்த ஒரு சில படங்களில் காணாமல் போய்விடுவதால் சரியான நாயகி கிடைக்காத சூழலில் மீண்டும் மீண்டும் திரிஷா நயன்தாரா என இயக்குனர்கள் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால் இப்போதைக்கு சற்று நிலமை மாறியிருக்கிறது. பூஜா ஹெக்டே கயாடு லோஹர் அனுபமா பரமேஸ்வரன் ராஷ்மிகா மந்தனா மமிதா பைஜூ ஐஸ்வர்யா லட்சுமி ஸ்ருதிஹாசன் போன்றவர்களும் 2ம் சுற்றில் தேவயானி சிம்ரன் ரம்பா போன்ற சீனியர் நடிகைகளும் களத்தில் குதித்திருப்பதால் கேரக்டருக்கு ஏற்ப இப்போதைய இளம் நடிகைகளையோ அல்லது சீனியர் நடிகைகளையோ இயக்குனர்கள் கமிட் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் நடித்த நடிகை கயாடு லோஹர் இப்போது தனுஷ் சிம்பு விக்ரம் சூர்யா என அவர்கள் புதிதாக கமிட் ஆகியுள்ள படங்களில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் தனது சம்பளத்தை அவர் 1.5 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அது பிளாக்பஸ்டர் வெற்றி என்பதாலும் சமூக வலைதளங்களில் அவருக்கு இருக்கும் மாஸ் வரவேற்பாலும் தனது சம்பளத்தை ரூ. 1.5 கோடி வரை அவர் உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





