தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் படுதோல்வியை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் கமிட்டானார் ரஜினிகாந்த். கடந்த பத்தாம் தேதி படமானது உலகம் முழுவதும் நான்காயிரம் ஸ்கிரீன்களில் வெளியானது. இந்தப் படத்தின் வெற்றி ரஜினிகாந்த்திற்கும் நெல்சன் திலீபுகுமாருக்கு ரொம்பவே அவசியப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் படம் அமைந்தது. நெல்சனின் டார்க் காமடி, ரஜினியின் ஸ்டைல் மற்றும் பான் இந்தியா ஸ்டார்களின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் போன்றவை கிளிக்காக படம் மெகா ஹிட் ஆகியுள்ளது. படம் வெளியாகி முதல் நாளிலேயே 49 கோடி ரூபாயை இந்தியா முழுவதும் வசூலித்ததாக தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இப்படிப்பட்ட சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி படம் வெளியாகி ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும் படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கமிட்டானபோது அவருக்கு 80 கோடி ரூபாய்தான் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு காரணமாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியிடம் கூறியதாகவும் அதற்கு ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டார் என்றும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் ரஜினியின் சம்பளம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த் படம் ஆரம்பிக்கும் முன்னரே படம் சம்பாதிக்கும் லாபத்தில் பாதி தனக்கு கொடுத்து விட வேண்டும் என அக்ரீமெண்ட் போட்டுவிட்டாராம். அப்படி பார்க்கையில் ரஜினியின் சம்பளம் 80 கோடி ரூபாய் போக; தற்போது படத்திற்கு வந்திருக்கும் லாபத்தில் பாதியும் ரஜினிக்கே செல்கிறது.
எனவே ரஜினியின் சம்பளம் இந்தப் படத்தில் நிச்சயம் 200 கோடி ரூபாயை தொட்டிருக்கும் என ரசிகர்கள் கணிக்கின்றனர். மேலும் எங்கள் தலைவர் எப்போதும் கிங்குதான். சம்பள விஷயத்தில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.





