நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இந்த படம் இதுவரை 1450 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிக்கரமான படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், துரதிஷ்டவசமான சம்பவங்களும் நடந்துள்ளது.
அதாவது புஷ்பா 2 ரிலீஸூக்கு முந்தைய நாளில் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் அந்த படத்தின் பிரிமியர் ஷோ நடந்தது. அந்த பிரிமியர் ஷோவில், படக்குழுவினருடன் நடிகர் அல்லு அர்ஜூனும் கலந்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்குள் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அங்கிருந்த போலீசார் தடியடி நடத்திய நிலையில், நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜூன், உயிரிழந்த ரசிகை ரேவதிக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தார். அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து தியேட்டர் உரிமையாளர், மேனேஜர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் போலீசார், சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜூனை அவரது வீட்டில் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஐதராபாத் ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அல்லு அர்ஜூன் வீட்டில் இருக்கிறார். அவருக்கு சக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா டகுபதி, நானி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், ஐதராபாத் ஐகோர்ட் அல்லு அர்ஜூனுக்கு வழங்கிய இடைக்கால ஜாமினை எதிர்த்து, ஐதராபாத் போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் மீண்டும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இந்த வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் பெறுவது குறித்து தனது வக்கீல்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.





