நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அமரன் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, மெகா ஹிட் படமாக அமைந்துவிட்டது. 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. இதுவரை எஸ்கே நடித்த படங்களில் இதுதான் பெரிய வசூலை தந்த படமாக உள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஏற்கனவே புறநானூறு என பெயர் வைக்கப்பட்டு, சூர்யா ஒரு மாதம் வரை மதுரையில் நடந்த படப்பிடிப்பிலும் பங்கேற்றார். ஆனால் அதன்பிறகு படத்தில் இருந்து விலகி விட்டார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட காலத்தை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் படத்துக்கு புறநானூறு என்பதற்கு பதிலாக வேறு பெயர் வைக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதத்தில் எஸ்கே 25 படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சகோதரன் கேரக்டரில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த கேரக்டரில் முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக இருந்து அவர் பிறகு மறுத்துவிட்டதால் இப்போது அந்த கேரக்டரில் நடிகர் அதர்வா நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர்கள் பகத் பாசில், நிவின் பாலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் கால்ஷீட் இல்லாததால் பகத் பாசில் நடிக்க மறுத்ததாகவும் தகவல் கூறப்பட்டது. நிவின் பாலி நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க விஷாலிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் ரூ. 18 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அடுத்து நடிகர் ஜெயம் ரவியிடம் சுதா கொங்கரா தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதனால் விஷால் அல்லது ஜெயம் ரவி இருவரில் ஒருவர், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.





