இயக்குனர் நடிகர் என ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஒரு திரைக்கலைஞர் கே பாக்யராஜ். இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர். பாரதிராஜாவின் சீடராக அவருக்கு பெருமை சேர்த்தவர். கே பாக்யராஜ் இயக்கிய பல படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் கே பாக்யராஜ் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் மூவரும் மேடையில் அமர்ந்திருந்த போது இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, இளையராஜா பற்றி கூற நிறைய விஷயங்கள் இருக்கிறது.
ஆனால் இந்த ஒரு விஷயத்தை பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன். நான் இயக்கி நடித்த ராசுக்குட்டி படத்துக்கு அவர்தான் இசையமைத்தார். அப்போது 2 பாடல்களை அவர் எனக்காக போட்டுக் கொடுத்தார். ரொம்பவும் அருமையான பாடல்கள். ஆனால் ராசுக்குட்டி படத்தில் அந்த பாடல்களை என்னால் பயன்படுத்த முடியவில்லை.
அதனால் இந்த 2 பாடல்களையும் அப்படியே வைத்திருங்கள். நானே அடுத்த படத்தில் பயன்படுத்தி கொள்கிறேன். என்னுடைய பெயரில் எழுதி பதிவு செய்து வைத்து விடுங்கள் என்று கூறிவிட்டேன். அப்புறம் சில நாட்களுக்கு பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஏதோ ஒரு வேலையாக போனேன்.
அப்போது அங்கு நான் சொன்ன அந்த 2 பாடல்களும் எஜமான் படத்துக்காக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும், நிலவே முகம் காட்டு என்னை பார்த்து என்ற அந்த 2 பாடல்களும் ராசுக்குட்டி படத்துக்காக உருவான பாடல்களை எஜமான் படத்துக்கு கொடுத்து விட்டார்.
இப்படி இளையராஜா பண்ணி விட்டாரே என்னை ஏமாற்றி விட்டாரே என்று பதறிப் போய்விட்டேன். எஜமான் பட இயக்குனர் ஆர்வி உதயகுமாரிடம் கேட்டால் அவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார். பொள்ளாச்சியில் ஒரு தோட்டத்தில் என் படத்துக்காக போட்ட 2 பாடல்களை இளையராஜா எஜமான் படத்துக்கு கொடுத்துவிட்டார் என்று கே பாக்யராஜ் கூற கூற இளையராஜா அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே இருந்தார்.





