இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார். அவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் தல என செல்லமாக அழைத்துவருகின்றனர். சொல்லப்போனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியும் தமிழ்நாட்டை தனது இரண்டாவது வீடு என்று அடிக்கடி குறிப்பிடுவார்.
இச்சூழலில் தோனி எண்ட்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஷியும், அவரும் தொடங்கினர். அதனையடுத்து அவர் எந்த மொழியில் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தமிழகத்தின் மீது அன்பை பறைசாற்றும்வகையில் தமிழிலேயே தனது முதல் படத்தை தயாரித்தார். படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் என பெயர் வைகக்ப்பட்டது.
ஹரிஷ் கல்யாண், நதியா, யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தனது காதலரை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் அவரது தாயை புரிந்துகொள்ள வேண்டும் என கண்டிஷன் போடும் இவானா அதற்காக ஹரிஷின் தாய் நதியாவுடன் ஒரு டூர் செல்வதுபோலவும் அங்கு ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்தும் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் படத்தை இயக்கி இசையமைத்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்போடு படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தோனி தயாரித்திருக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்களும் படை எடுத்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ய தவறிவிட்டது. திராபையான காட்சிகள்தான் படம் முழுக்க இருந்ததாக ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து பேசுகையில், “படத்தில் உட்கார முடியவில்லை. ஒரு காட்சிக்கூட பார்க்கும்படி இல்லை. இவானாவிடம் கவர்ச்சியும் இல்லை, அறிவும் இல்லை. அறுஅறுனு அறுத்துருக்காங்க. குறிப்பாக திருமணம் சம்பந்தம் முடிக்கும் முன்பு ஒருவர் இன்னொருவர் வீட்டில் கை நனைக்கமாட்டார். ஆனால் இதிலோ அதற்கு முன்னதாகவே பழகுகிறார்கள். இது பண்பாட்டை மீறிய படம்.
லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் தோல்விக்கு தோனியின் மனைவிதான் காரணம். ஏனென்றால் அவர்தான் கதை எழுதியிருக்கிறார். ஒருவேளை அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இதை எழுதியிருப்பாரோ என்னவோ. தோனியின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்குத்தான் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார் என எண்ண தோன்றுகிறது” என்றார்.





