தமிழ் சினிமாவை பொருத்த வரை சில கோடிகள் செலவு செய்து படம் எடுத்து, அதில் பல கோடிகளை சம்பாதிக்கும் நிலைமை எல்லாம் இப்போது இல்லை. 300 கோடி ரூபாய் செலவு செய்தால், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பிடிக்க வேண்டும். சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்காமல், சுறா மீனை போட்டு திமிங்கலத்தை பிடிக்கும் கதை தான் தமிழ் சினிமாவில் நடக்கிறது.
சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் வசூல் 1117 கோடி ரூபாயை கடந்துள்ளது. ஜெயிலர் படத்தின் வசூல் 700 கோடி ரூபாயை கடந்து இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் வசூல், 100 கோடி ரூபாயை தொட்டு இருக்கிறது. இப்படி பணம் காய்க்கும் மரமாக, உண்மையில் சினிமா உலகம் மாறி விட்டதா என்றுதான் ஆச்சரியப்பட வைக்கிறது.
அதுமட்டுமின்றி இப்போது எடுக்கப்பட்டு வரும் ரஜினி 170 படத்தில் அமிதாப், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார் என பெரிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்திலும் அர்ஜூன், பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கிறது. இதில் விஜய்க்கு சம்பளம் மட்டும் ரூ. 200 கோடி என்பது ஆச்சரியத்தின் உச்சத்தை தொடுவதாக இருக்கிறது.
இந்நிலையில், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று ஒரு நேர்காணலில் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி இருந்தார். அவரிடம் ஜெயிலர் படம் 700 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஜவான் படம் 1117 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருக்கிறது. அதுபோல், லியோ படத்தின் வசூலாக நீங்கள் கருதுவது எவ்வளவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியது, பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
என்னை பொருத்தவரை, என் படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். காசு கொடுத்து, நேரத்தை செலவழித்து படம் பார்க்க வருபவர்கள், என் படத்தை பார்த்து திருப்தியடைய வேண்டும். கடந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் இடையே நான் வளர்ந்திருக்கிறேனா, அல்லது வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறேனா, அப்படியே அதே நிலையில்தான் இருக்கிறேனா என்ற அவர்களது ரேட்டிங் எனக்கு முக்கியம். என் படத்தை, என் தரத்தை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டனர் என்பதும் முக்கியம்.
இந்த படத்தை எடுக்க, பணம் போட்ட தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை நான் திருப்பி எடுத்து தந்தாலே அது எனக்கு வெற்றிதான். அவர் நஷ்டமடைந்து விடக் கூடாது. என் படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பது என் கவலை அல்ல. அதை விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதில் ஒரு இயக்குநராக வியூ, கலெக்சன் இதில் என் பங்கு எதுவுமே இல்லை. தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள், தயாரி்ப்பாளர்களுக்கு தான் அது முக்கியம். இவ்வளவு கலெக்சன் குறித்து நான் பெருமைப்பட ஒன்றுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். கலெக்சன் குறித்து அவர்களும் சந்தோஷப்பட்டு, படம் குறித்து ரசிகர்களும் சந்தோஷப்பட்டால், நான் அடுத்த படத்தை சந்தோஷமாக ஆரம்பிப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





