மணிவண்ணன் ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் திகழ்ந்தவர். குறிப்பாக “நூறாவது நாள்”, “24 மணி நேரம்” போன்ற பல திரில்லர் திரைப்படங்களை கொடுத்ததில் முக்கியமானவராக திகழ்ந்தவர்.

மேலும் “அமைதி படை” என்ற பிளாக்பஸ்டர் அரசியல் நையாண்டி திரைப்படத்தையும் கொடுத்தவர். இத்திரைப்படம் இப்போதும் சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வரும் திரைப்படமாக இருக்கிறது.
மணிவண்ணன் கம்யூனிஸ சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது திரைப்படங்களில் ஆங்காங்கே கம்யூனிஸ சித்தாந்தங்கள் குறித்த வசனங்கள் இடம்பெறுவது வழக்கம். மணிவண்ணன் தனது இளமைக் காலங்களில் திராவிட இயங்களின் மீது ஈர்ப்புடையவராக இருந்தார்.

அதன் பின் மார்க்ஸியத்தின் அறிமுகம் கிடைத்தபோது அவர் நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்ததாக கூட சொல்வார்கள். அதன் பின் தமிழ்தேசியவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மணிவண்ணனுக்கு மதுப் பழக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இவ்வாறான நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 58 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகரான வாகை சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மணிவண்ணனுக்கு மதுப்பழக்கம் அதிகமாகவே இருந்தது என கூறிய அவர், “பொதுவாக மது அருந்திய பின் பலருக்கும் நிதானம் இருக்காது, ஆனால் மணிவண்ணன் மது அருந்திய பின் கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் நூல்களை மிகவும் ஆழமாக வாசிப்பார். அந்தளவுக்கு மணிவண்ணனுக்கு விசாலமான அறிவு இருந்தது” என்று கூறியிருந்தார்.





