லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு, திருமணத்துக்கு பிறகும் கொஞ்சம் கூட இமேஜ் குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். வழக்கமாக பல நடிகைகள், திருமணத்துக்கு பிறகு நடிக்கவே மாட்டார்கள். திருமண வாழ்வில், குடும்பத்தில் செட்டிலாகி விடுவர். ஆனால் நயன்தாரா விஷயத்தில் அது நேர்மாறாக இருக்கிறது.
முதலில் நடிகர் சிலம்பரசன், பிறகு நடிகர் பிரபுதேவா ஆகியோருடன் காதல் வசப்பட்ட நயன்தாரா, அவர்களுடன் ஒரு கட்டத்தில் காதலை முறித்துக் கொண்டார். அதன்பிறகு, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, அந்த படத்தை இயக்கிய டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு, 7 ஆண்டுகளாக அவர்கள் காதல் நீடித்தது.
விக்கி – நயன் குறித்து பல விமர்சனங்களுக்கு பிறகு, கடந்தாண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களில், வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். உயிர், உலகம் என குழந்தைகளுக்கு பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். அடிக்கடி, நயன்தாரா தனது குழந்தைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சியான் விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். இப்போது, 74 படங்களில் நடித்து முடித்த நிலையில், அடுத்து நயன்தாராவின் 75வது படம், அன்னபூரணி என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது.
நடிகர் ஜெய், இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ராஜா ராணி படத்துக்கு பிறகு இந்த படம், அவர் நயன்தாராவுடன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கி உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் வீடியோ வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிராமணப் பெண்ணாக வரும் நயன்தாரா, அசைவம் விரும்புவரை போல, இந்த காட்சிகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், சமையல் போட்டிக்காக அவர் அவ்வாறு நடிப்பதுதான் படத்தின் மையக்கரு என்கின்றனர். படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி, அன்னபூரணி, தியேட்டர்களில் நேரில் சந்திக்க வருகிறார். அன்னபூரணி படம், வரும் டிசம்பர் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





