கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக திமுக போலவே தவெக கட்சி தரப்பிலும் பல இலவச கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அப்போதே அதன் தலைவர் விஜய், திமுக போல தகுதியான மக்களுக்கு என்று இந்த திட்டங்களை ஏமாற்ற மாட்டோம். எல்லோருக்கும் இந்த திட்டங்களின் பயன் சென்று சேரும் வகையில் வெளிப்படையாக இருப்போம் என்றுதான் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் இப்போது திமுக அதிமுக கட்சிகளை விடவும் இலவச திட்டங்களில் தொடர்ந்து நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் இந்த திட்டங்கள் எல்லாம் 10 சதவீதம் மக்களுக்காவது போய் சேருமா என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் நிபந்தனை என்ற பெயரில் மக்களை பயனாளியாக்க விடாமல் தடுக்கும் யுக்தியை தவெக அரசு நுட்பமாக கையாளுகிறது.
உதாரணமாக விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக கூறிய தவெக அரசு, அதன்பிறகு வாங்கிய கடன்களில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ஏமாற்றியது. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தரப்படும் என கூறிய விஜய், இப்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர் தரப்படும் என்கிறார்.
அதுவும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். முதலில் பணம் கொடுத்து கேஸ் சிலிண்டரை வாங்கிய பிறகு பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்கிறார். அதற்கு கால அவகாசமும் இல்லை. மாநகர பகுதிக்குள் அனைத்து பெண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு இப்போது ஏசி பஸ்கள் போக்குவரத்தை மாநகரில் அதிகரித்து வருகிறார்.
இந்த ஏசி பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணிக்க முடியாது. மற்ற இலவச பஸ்களின் எண்ணிக்கை குறைக்கும் பட்சத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஏசி பஸ்களில்தான் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும். அதே போல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்லிவிட்டு 200 யூனிட்டுக்கு மேல் மின்கட்டணத்தை முதலில் இருந்ததை விட 2 மடங்கு 4.50 ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டனர்.அதனால் ஒரு வீட்டில் 200 யூனிட்டுக்கு மேல் 50 யூனிட் பயன்படுத்தினாலே, முன்பு செலுத்திய மின்கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக செலுத்த நேரிடும்.
அதனால் ஒரு யூனிட் மின்சாரம் கூட இலவசமாக கிடைக்காது. இதில் 3 ஆயிரம் 4 ஆயிரம் என மின்கட்டணம் செலுத்தியவர்கள் 15 ஆயிரம் 20 ஆயிரம் என மின்கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என்று சொல்லிவிட்டு இப்போது அதை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு என மாற்றி விட்டனர். இப்படி மொத்தத்தில் திமுக அதிமுகவுக்கு மாற்றாக இருக்கும் என்று மக்கள் நம்பிய தவெக அரசு, இப்படி மக்களுக்கான இலவச திட்டங்களில் தில்லு முல்லு செய்வதால் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கண்டிப்பாக இது இடைத் தேர்தலில் தவெகவுக்கு எதிராக திரும்பி அதிமுக – திமுக கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.





