நகைச்சுவை நடிகர் என்னும் நிலையை மாற்றி விட்டு முழுக்க முழுக்க கதாநாயகனாக உருவெடுத்து இருக்கிறார் சந்தானம். இதில் அவர் வெற்றியும் கண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்தான் அவருக்கு ஹீரோவாக முதல் திரைப்படம். தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெற்றி பெற்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
அது இங்கு வரவேற்பு பெற்ற சூழலில், தொடர்ந்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலேயே வலம் வர ஆரம்பித்தார். இதில் தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களும் சந்தானத்திற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.
ஹாரர் விஷயத்தில் நகைச்சுவையை புகுத்தி கலக்கியிருந்தார்கள். ஆனால் இதன் பிறகு சந்தானம் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியை சந்திக்க ஆரம்பித்தன. பிஸ்கோத், இங்க நான் தான் கிங், கிக், டகால்டி என அவர் நடித்த எந்த திரைப்படங்களும் திரையரங்குகளில் ஓடவில்லை.
ஏன் சந்தானம் ரசிகர்களுக்கு கூட இது போன்ற திரைப்படம் வந்தது தெரியாது. சந்தானம் மார்க்கெட் இனி அவ்வளவுதான் என்று பலரும் கூறிக் கொண்டிருந்த வேளையில், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி அவரைக் காப்பாற்றியது. நடிகருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் அளவுக்கு அந்த திரைப்படம் திருப்திகரமாக அமைந்தது.
படத்தில் நகைச்சுவையும், திரைக்கதையும் கிளிக் ஆனதால் பலரும் அதற்கு வரவேற்பு கொடுத்தார்கள். இப்படி டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சந்தானத்திற்கு வாழ்வை கொடுக்க, அடுத்ததாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் சந்தானத்திற்கு வெற்றியை பெற்று தந்தது. தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கும் அவர் தற்போது சிம்பு திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். பார்க்கிங் பட இயக்குனர் இதனை எடுக்க இருக்கிறார்.
இதன் நடுவே தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சந்தானம். நடிகர் ஆர்யா தான் இதனை தயாரித்து உள்ளார். செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம், வரும் மே மாதம் 16ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





