தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சினேகா. நடிகை கேஆர் விஜயாவுக்கு பிறகு இந்த பட்டம் கிடைத்தது சிரிப்பழகி சினேகாவுக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சியான் விக்ரம் அப்பாஸ் சூர்யா தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் சினேகா.
குறிப்பாக நடிகர் ஸ்ரீகாந்துடன் ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன் கனவு போஸ் போன்ற படங்களில் நடித்த போது இருவரும் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இறுதியில் நடிகர் பிரசன்னாவை நடிகை சினேகா காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
இயக்குனர் சேரனுடன் சினேகா நடித்த ஆட்டோகிராப் பிரிவோம் சந்திப்போம் படங்களும் தங்கர் பச்சான் இயக்கத்தில் சினேகா நடித்த பள்ளிக்கூடம் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் விலை மாது கேரக்டரில் சிநேகா நடித்திருந்தது பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் நடிகை சினேகாவுக்கு இயக்குனர் கரு பழனியப்பன் விருது வழங்கினார். அப்போது விழா மேடையில் நடிகை சினேகா பேசியதாவது, சினிமாவுக்கு வந்த புதிதில் 3 ஆண்டுகளில் மிகப்பெரிய ஒரு விபத்தில் சிக்கினேன். கை கால் முதுகு என உடலில் பல இடங்களிலும் பலத்த அடிபட்டது. காயம் ஏற்பட்டது. நான் எழுந்து நடப்பதற்கே 8 மாதங்களுக்கு மேலாகும் என்றும் கூறி விட்டனர்.
அந்த சமயத்தில் பார்த்திபன் கனவு படத்தின் கதையை கரு பழனியப்பன் என்னிடம் சொன்னார். எப்படி எந்த நம்பிக்கையில் என்னிடம் கதை சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடந்து விடுவீர்கள் என்று அவர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில் ஒன்றரை மாதத்தில் பார்த்திபன் கனவு படப்பிடிப்பில் நான் பங்கேற்றேன்.
அந்தப் படத்தில் எல்லோருக்கும் விருது கிடைத்தது. எனக்கு மட்டும் விருது கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டேன். அந்த படம் மட்டுமல்ல, ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் பட்டாஸ் என எந்த படத்திற்கும் எனக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் போகப் போக அது எனக்கு பழகிவிட்டது. விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பது தான் முக்கியம் என்று நடிகை சினேகா அந்த விழாவில் வருத்தமாக பேசியிருக்கிறார்.





