வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை, லோகேஷ் கனகராஜ் இயக்குவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான போதே அது குறித்து பல்வேறு தகவல்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்தார். முக்கியமாக தனது முந்தைய திரைப்படங்களில் போதை பொருட்கள் காட்டப்பட்டது போல இதில் இருக்காது என்று அவர் உறுதிப்படக்கூறியிருந்தார். மேலும் இது எல் சி யு வில் வராது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
லியோ திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் போது, அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இதில் தான் அவ்வாறு செயல்பட போவதில்லை என்றும், நிதானமாக படத்தை எடுக்க போவதாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதற்காக திரைக்கதை எழுதும் பணியில் மட்டும் அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார். இப்படியான சூழலில் தான் சமீபத்தில் அந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியானது. அதில் ரஜினி தனது அபூர்வ சகோதரர்கள் படத்தில் பேசிய டயலாக்கை, அதே மாடுலேஷனில் கனக்கச்சிதமாக பேசியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தங்கம் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரஜினிக்கு நண்பராக சத்யராஜ் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். இதன் படபிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அனைவரும் விசாகப்பட்டினத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதில் ஸ்ருதிஹாசன், கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், மலையாள நடிகர் சௌபின் ஷபீர் படத்தில் இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார். இந்நிலையில் தயாள் என்கிற கதாபாத்திரத்தில் அவர் கூலி படத்தில் நடிப்பதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டச் செய்திருக்கிறது.





