லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு, அஜர்பைஜானில் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் சென்னை திரும்பிய படக்குழு, மீண்டும் 2ம் கட்ட படப்பிடிப்புக்கு சென்று தொடர்ந்த படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் நலம் சார்ந்த தொழில்துறை சட்டதிட்டங்கள், வரைமுறைகள், நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த அடிப்படையில்தான் தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும். தொழிலாளர் நலத்துறை சட்டங்களை மீறுவது அபராதம், கைது போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் அஜர்பைஜானில் நடந்துவரும் படப்பிடிப்பு, வாரத்தில் அனைத்து நாட்களும் நடத்தப்படுகிறது. 12 மணி நேரம், 14 மணி நேரம், 18 மணி நேரம் என தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. ஏனெனில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும் என்ற சூழலில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் சென்ற ஊழியர்களுடன், அங்குள்ள தொழிலாளர்களும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அஜர்பைஜானில் உள்ள தொழிலாளர் நலத்துறை சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் வாரத்தில் 5 நாட்கள் பணி, 2 நாட்கள் விடுமுறை என்பதுதான் விதிமுறை. ஆனால், 7 நாட்களும் விடுமுறை இன்றி பணி செய்வதை அங்குள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டில் படப்பிடிப்பில் 2 நாட்கள் விடுமுறை விட்டால், எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும் என படத்தயாரிப்பு தரப்பில் எடுத்து கூறியுள்ளனர்.
இதையடுத்து தொடர்ந்து ஒருவாரம் அதாவது ஏழு நாட்கள் பணிசெய்யுங்கள். படப்பிடிப்பை நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் 8வது நாள் ஒருநாள் விடுப்பு கட்டாயம் விட்டாக வேண்டும். அதாவது ஏழு தினங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் விடுப்பு என்பதை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் நிபந்தனை விதியை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) அஜர்பைஜானில் விடாமுயற்சிக்கு படப்பிடிப்பு குழுவுக்கு விடுமுறை விடப்பட்டது. உடனடியாக தனது துபாயில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற நடிகர் அஜீத்குமார், அங்கு தனது வழக்கமான மருத்துவ உடல் பரிசோதனையை செய்து கொண்டிருக்கிறார். இந்த விடுமுறை பிரச்னையால், படப்பிடிப்புக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சமும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில், ஒருவாறாக பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.





