நடிகர் அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு, அஜர்பைஜானில் கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்பு, சென்னை வந்த படக்குழு மீண்டும் கடந்த வாரத்தில் அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றது. இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா பணியாற்றிய நிலையில், இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பில் நீரவ் ஷாவுக்கு பதிலாக ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இதற்கான காரணம் தெரியவில்லை. எனினும் படப்பிடிப்பு தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
பொதுவாக படப்பிடிப்பு வேளைகளில் அந்த ஊரைச் சேர்ந்த ரசிகர்கள், முக்கிய நடிகர்களை பார்க்க ஆசைப்படுவர். படப்பிடிப்பு தளத்துக்கு வந்து காத்திருந்து அவர்களை பார்த்து, அந்த காலத்தில் ஆட்டோகிராப் வாங்குவர். இப்போது மொபைல் போன் இருப்பதால் அருகில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி எடுத்த புகைப்படங்களை மற்றவர்களிடம் காட்டி மகிழ்ச்சி கொள்கின்றனர்.
இப்படி ரசிகர்கள்படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால், தனது காட்சிகள் முடிந்த பின்பு அவர்களுடன் நின்று நடிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிப்பர். படத்தில் அணிந்திருக்கும் கெட்டப், டிரஸ்சில் இருந்தால் அவற்றை களைந்துவிட்டு நார்மலாக உள்ள கெட்டப்பில் புகைப்படங்கள் எடுக்க ரசிகர்களுடன் நின்றுக்கொள்வர். இப்படி 100 பேர் இருந்தாலும், அத்தனை பேருடனும் அஜீத் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுதான் அனுப்பி வைப்பார். அந்த பழக்கம் கேப்டன் விஜயகாந்துக்கும் உண்டு.
அஜர்பைஜானில் நடந்துவரும் ஷூட்டிங்கில் அதுபோல் ரசிகர்கள் பலரும் அவ்வாறு அஜீத்குமாருடன் நின்று தினமும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். அந்த படத்தில் டெக்னிஷியனாக பணிபுரியும் ஒருவரும் அஜீத்குமாரிடம் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்க, அவரை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அப்போது படத்தில் நடிக்கும் கெட்டப்பில் அஜீத் இருந்திருக்கிறார்.
அந்த டெக்னிஷியன் அஜீத்குமாருடன் எடுத்த படத்தை தனது வாட்சப் டிபியில் வைக்க அதை சிலர் கிரீன்ஷாட் எடுத்து வைரலாக்கினர்.. இதனால் அஜீத்குமாரின் கெட்டப் ரகசியம் வெளியாகி விட்டதே என டைரக்டர், தயாரிப்பாளர் டென்சனாகி விட்டனர். அஜீத் பரவாயில்லை விடுங்க என்று சொல்லியும் கேட்காத அவர்கள், அந்த டெக்னிஷியனை வேலையில் இருந்தே அனுப்பி விட்டனர். இப்படி ஒரு சம்பவம் விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் நடந்து, அங்கிருந்த படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





